அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த விமானத்தில் பெண் பயணி ஒருவர் மீது சிறுநீர் கழித்த ஆடவருக்கு விமானத்தில் பறக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் அவர் மீது மானபங்கம், அநாகரிக நடத்தை ஆகியன தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. டெல்லி காவல்துறை நேற்று இதனைத் தெரிவித்தது.
நவம்பர் 26ஆம் தேதி நியூயார்க் நகரிலிருந்து புதுடெல்லி வந்த விமானத்தில் முதல் வகுப்பில் சம்பவம் நடைபெற்றதாகவும் அவர்கள் கூறினர். குடிபோதையில் இருந்த 70 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததோடு ஆபாசமான முறையில் நடந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
நடந்தது குறித்து விமான ஊழியர்களிடம் தெரிவித்தும், அந்த ஆடவர் டெல்லியில் இறங்கி சுதந்திரமாக வெளியேறியதாக பாதிக்கப்பட்ட மூதாட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து தங்களுக்கு டிசம்பர் 28ஆம் தேதி ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் இருந்து புகார் வந்ததாகத் தெரிவித்த காவல்துறை, சம்பந்தப்பட்ட ஆடவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறியது.
தமக்கு ஏற்பட்ட நிலை குறித்து ஏர் இந்தியா நிறுவனத் தலைவர் சந்திரசேகரனுக்கு கடிதம் ஒன்றை அந்த மூதாட்டி அனுப்பி இருந்தார். விமானத்தினுள் விளக்குகள் அணைக்கப்பட்டதும் தமது கால்சட்டையை அவிழ்த்து ஆடவர் தம் மீது சிறுநீர் கழித்ததாகவும் பின்னர் அவர் தமது அந்தரங்க உறுப்பைக் காட்டி ஆபாசமாக நடந்துகொண்டார் என்றும் அந்தக் கடிதத்தில் மாது கூறினார்.
"எனது உடுப்பு, காலணிகள், கைப்பை அனைத்திலும் சிறுநீர் பட்டுவிட்டது. விமானச் சிப்பந்தி என்னிடம் வந்து, கைப்பை, காலணிகள் மீது கிருமி நாசினியைத் தெளித்தனர்," என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
விமானக் கழிவறையில் அந்த மாது தம்மை துப்புரவுப்படுத்திக்கொண்ட பிறகு, மாற்றிக்கொள்ள வேறு துணிமணிகளையும் காலணிகளையும் விமானச் சிப்பந்திகள் வழங்கினர்.
அசுத்தமான தம் இருக்கைக்குத் திரும்ப விரும்பாததால், கழிவறை ஓரமாக சுமார் 20 நிமிடங்களுக்கு அந்த மாது நின்றார். விமானச் சிப்பந்திகள் அமர்வதற்கான ஒடுக்கமான இருக்கையில் அவர் அமர வைக்கப்பட்டார். அங்கு ஒரு மணி நேரம் அமர்ந்திருந்த பின்னர் தமது இருக்கைக்குத் திரும்புமாறு மாது கேட்டுக் கொள்ளப்பட்டார்.