தமிழ் இனம் முன்தோன்றிய மூத்த குடி என்று சொல்லப்படுவதை மெய்ப்பிக்கும் வகையில் கீழடியில் தோண்ட தோண்ட தமிழினத் தொன்மை உலகிற்குத் தெரியவருவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மையை உலகிற்கும் உலக மக்களுக்கும் எடுத்துக்காட்டும் வகையில், தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் கீழடி என்ற அகழாய்விடத்தில் ரூ.18.8கோடி செலவில் (சுமார் $3 மில்லியன்) அமைக்கப்பட்டு உள்ள அதி நவீன கீழடி அருங்காட்சியத்தை முதல்வர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
அந்த அருங்காட்சியம் 31,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு உள்ளது. கீழடி அகழாய்வு இடத்தில் 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அகழாய்வுகள் நடந்து வருகின்றன.
தமிழ்ச் சமூகம், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கல்வியறிவு, எழுத்தறிவு, நகர வாழ்வு, உலகத் தொடர்பு ஆகியவற்றைக் கொண்டு உயர் நாகரிக அம்சங்களுடன் வாழ்ந்தது என்பதை மெய்ப்பித்து உள்ள 1,000க்கும் மேற்பட்ட குறியீடுகள்; 60க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறி களுடனான பானை ஓடுகள்; பாத்திரங்கள்; பண்டங்கள்; கல் மணிகள்; தங்க அணிகலன்கள் வரை இதுவரை கிடைத்து உள்ள அனைத்தும் கீழடி அருங்காட்சியத்தில் பழமை கெடாமல் அதிநவீன அம்சங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
அருங்காட்சியத்திற்குச் செல்வோர், 15 நிமிட ஒளி-ஒலிக் காட்சி வழி தமிழ்நாட்டின் தொன்மை, வரலாறு, கீழடியின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.
தொடுதிரை மூலம் வரலாற்று இடங்களைத் தெரிந்துகொள்வது; கணினி உயிரோவியக் காட்சிகள், மெய்நிகர் காட்சிகள், கப்பல் வடிவமைப்புகள், தமிழர் தொடுதிரை விளையாட்டுகள், முப்பரிமாணக் காட்சிகள் உள்ளிட்ட பல அம்சங்களும் கீழடி அருங்காட்சியகத்தில் இடம்பெற்று உள்ளன.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட முக்கியமான கண்டுபிடிப்புகள், உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு அவை கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேரந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.