மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான யோசனையை சிங்கப்பூர் மறுத்துள்ளது.
2021 அமைதித் திட்டத்தை நிறைவேற்றுவதில் ராணுவ அரசாங்கம் முன்னேற்றம் காட்டாததை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சுட்டினார்.
தாய்லாந்தின் இடைக்கால அரசாங்கம், மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த யோசனையை முன்மொழிந்துள்ளது குறித்து ராய்ட்டர்ஸ் அறிக்கை வெளியிடப்பட்டதற்கு டாக்டர் விவியன் கருத்துத் தெரிவித்தார்.
ஆசிய வெளியுறவு அமைச்சர்களுடன் இன்று சந்திப்பு நடத்தவும் தாய்லாந்து அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
“ஆசியானுடைய பார்வையில், எங்களிடம் ஐந்து அம்ச இணக்கம் உள்ளது. ஆனால், அந்த இணக்கத்தை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை. எனவே, உச்சநிலைக் கூட்ட அளவில் அல்லது வெளியுறவு அமைச்சர் நிலையில் மியன்மாரின் ராணுவ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தக் காலம் கனியவில்லை என நாங்கள் நம்புகிறோம்,” என்று டாக்டர் விவியன் கூறினார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற உச்சநிலைக் கூட்டத்தில் ஆசியான் தலைவர்கள் இந்த நிலைப்பாட்டை மறுஉறுதிப்படுத்தியதை அவர் சுட்டினார்.