தாய்லாந்து தலைநகர் பேங்காக் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று அந்நகரில் ‘ஹீட் இண்டெக்ஸ்’ எனப்படும் மொத்த வெப்பநிலை குறியீடு 50.2 டிகிரி செல்சியசைத் தொடும் என்று தாய்லாந்தின் வானிலை பிரிவு கணித்திருந்தது.
வெப்பநிலையுடன் ஈரத்தன்மையையும் கருத்தில்கொண்டு ‘ஹீட் இண்டெக்ஸ்’ குறியீடு கணக்கிடப்படுகிறது.
கோடைகாலம் தொடங்கியுள்ள தாய்லாந்தில் ‘ஹீட் இண்டெக்ஸ்’ குறியீட்டின்படி வெப்பநிலை ஆக அதிகமாக உள்ள ஐந்து வட்டாரங்களில் பேங்காக்கின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள பாங் நாங் முதலிடம் வகித்தது.
அதற்கு அடுத்தபடியாக ஆக அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்ட பகுதி சோன்புரி மாநிலத்தில் இருக்கும் லாயெம் சாபாங் நகரம்.
லாயெம் சாபாங்கில் ‘ஹீட் இண்டெக்ஸ்’ குறியீடு 49.4 டிகிரி செல்சியசாகப் பதிவானது. புக்கெட், சி சா கெட், பெட்சாபுன் ஆகியவை அதற்கு அடுத்த நிலையில் வந்தன.
‘ஹீட் இண்டெக்ஸ்’ குறியீடு 41லிருந்து 54 டிகிரி செல்சியசுக்குள் இருந்தால் அதிக நேரம் வெளிப்புறங்களில் நேரம் செலவிடுவோர் தசை இறுக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும், அதிக வெப்பத்தால் ஒருவரின் உடலில் நீர்ச் சத்து குறைந்துவிடக்கூடும். வெப்பத்தாக்கம் எனப்படும் இப்பிரச்சினை உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது.