அமெரிக்காவில் இணையக் கடத்தல் மோசடிக்காரர்களிடம் சிக்கிய சீன மாணவர் உட்டா மாநிலத்தின் வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்திலிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்தது.
அம்மாணவன் பயத்தில் உறைந்த நிலையில் காணப்பட்டதாக அது மேலும் கூறியது.
17 வயதான அந்த மாணவனின் பெயர் காய் ஜுவாங். அவர் உட்டா மாநிலத்தின் ரிவர்டேல் வட்டாரத்தில் இருக்கும் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படித்து வந்தார். அவர் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இணையக் கடத்தல் கும்பல் ஒன்று காய் ஜுவாங்கைக் கடத்தியதாகவும் அவரை விடுவிக்க அக்கும்பல் பிணைத் தொகை கோரியுள்ளதாகவும் சீனாவில் வசிக்கும் காயின் பெற்றோர் அவர் படித்து வந்த பள்ளியின் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
அக்கும்பல் அவர்களிடம் 80,000 அமெரிக்க டாலர் ( S$106,000) பிணைத் தொகையாக கேட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டு, கடத்தி வைக்கப்பட்டதைப் போன்ற படங்களை எடுத்து அவர்களிடம் வழங்கும்படியும் இல்லையென்றால் சீனாவில் வசிக்கும் அவருடைய குடும்பத்தைக் கொன்றுவிடுவதாகவும் அக்கும்பல் அம்மாணவரை மிரட்டியுள்ளது.
அதற்கு பயந்து காயும் உட்டா மாநிலத்தில் இருக்கும் அடர்ந்த வனப்பகுதியில் கூடாரம் அமைத்து அங்கு இருந்துள்ளார்.
காயின் வங்கி பணப்பரிமாற்றங்கள், தொலைபேசிப் பதிவுகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து அவர் பிரிகாம் நகருக்கு அருகிலுள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் 40 கி.மீ. வடக்கே ஒரு கூடாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக ரிவர்டேல் பகுதி காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அவரை டிசம்பர் 31ஆம் தேதி மீட்டதாகவும் காயின் பெற்றோர் அக்கும்பலுக்குப் பிணைத் தொகையைத் தந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.