வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தேசிய துணைப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் ஃபைனர் டிசம்பர் 4ஆம் தேதியன்று அமெரிக்கப் பேராளர் குழு ஒன்றை வழிநடத்தி புதுடெல்லி சென்றுள்ளார்.
அமெரிக்க மண்ணில் சீக்கியப் பிரிவினைவாதி ஒருவரைக் கொலைசெய்வதற்கான திட்டம் முறியடிக்கப்பட்டது. அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள, இந்தியா புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்திருப்பதை அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க மண்ணில் சீக்கியப் பிரிவினைவாதியைக் கொல்வதற்கான திட்டத்தை இந்திய அரசாங்க அதிகாரி ஒருவர் வழிநடத்தியதாக அமெரிக்க நீதித் துறை குற்றஞ்சாட்டியது. அதோடு அந்தக் கொலை முயற்சியை மேற்கொண்டதாக ஆடவர் ஒருவர் மீது அது குற்றச்சாட்டுகளையும் கொண்டுவந்தது.
அமெரிக்க அதிகாரிகள் அந்த சீக்கியப் பிரிவினைவாதியை குர்பத்வந்த் சிங் என்று அடையாளம் கண்டுள்ளனர். அவர் அமெரிக்க, கனடிய குடியுரிமையைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது அரசாங்க அதிகாரிகளில் ஒருவர் அந்தச் சதித்திட்டத்துடன் தொடர்புபடுத்தப்பட்டிருப்பது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கவலைகளை அதிகாரபூர்வமாக விசாரிக்கப்போவதாக இந்தியா சென்ற வாரம் கூறியிருந்தது. நவம்பர் 18ஆம் தேதி அமைக்கப்பட்ட புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவுகளைத் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போவதாகவும் அது தெரிவித்தது.