ஆஸ்திரேலியாவின் ஏபிஒய் லேண்ட்ஸ் பகுதியில் சுற்றித் திரிந்து அங்கு வசிக்கும் பழங்குடியினருக்குத் தொல்லை கொடுக்கும் சுமார் 10,000 ஒட்டகங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்து சுட்டுக்கொல்லும் பணி இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டகங்களைச் சுட்டுக் கொல்லும் ஆஸ்திரேலியாவின் முடிவு விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டகங்கள் கொல்லப்படும் ஏபிஒய் லேண்ட்ஸ் பகுதியில் சுமார் 2,300 பழங்குடி மக்கள் மட்டுமே வசிப்பதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவுக்கு காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்கள், வன விலங்குகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குடிதண்ணீர் இன்றி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் மக்கள் சேகரித்து வைத்துள்ள குடிதண்ணீரை ஒட்டகங்கள் குடித்துவிடுவதாகவும், தாகம் காரணமாக மக்களின் சொத்துக்கு சேதம் ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
வேலிகளை உடைத்துக்கொண்டு குடியிருப்புக்குள் நுழையும் ஒட்டகங்கள் பொருட்களை உடைப்பதுடன், குளிரூட்டி பெட்டியில் இருந்து சொட்டும் தண்ணீரைக் குடிப்பதற்காக அதையும் உடைப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதிகரித்து வரும் வறட்சி காரணமாக சில ஒட்டகங்கள் தாகத்தால் இறந்துபோயின; சில தண்ணீரைத் தேடி ஓடும்போது மற்ற ஒட்டகங்களால் மிதிபட்டு கொடூரமாக இறந்துபோயின. அதனையடுத்து, தெற்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் அமைப்பு ஒட்டகங்களைக் கொல்லும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சில இடங்களில் இறந்துபோன ஒட்டகங்களின் சடலங்கள் முக்கியமான நீர் நிலைகளை மாசுபடுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
பரந்து விரிந்த ஆஸ்திரேலியக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்யும் நோக்கில் 1840களில் அங்கு ஒட்டகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதற்கு அடுத்த 60 ஆண்டுகளில் சுமார் 20,000 ஒட்டகங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
தற்போது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான வனாந்திர ஒட்டகங்கள் ஆஸ்திரேலியாவில் இருப்பதாகவும் அவற்றின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது. அவை பெரும்பாலும் அங்குள்ள பாலைவனங்களில் சுற்றித் திரிகின்றன.
அவை நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதாலும் இயற்கைப் புல்வெளிகளைச் சேதப்படுத்துவதாலும் அவை தொல்லை கொடுக்கும் விலங்குகளாகவே கருதப்படுகின்றன.
விலங்குநல உயர்தரக் கட்டுப்பாடுகளுக்கு இணங்க இந்த ஒட்டகங்கள் கொல்லப்படும் என்றும் அவற்றின் சடலங்கள் எரிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity