நியூயார்க்: ஐநாவின் பருவநிலை நடவடிக்கை உச்சநிலை மாநாட்டில் பேசிய பதின்மவயது ஆர்வலர் கிரேட்டா துன்பர்க், உலகத் தலைவர்களைக் கடுமையாகச் சாடினார்.
“உங்களது பொய் சத்தியங்களால் எனது கனவுகளையும் குழந்தைப் பருவத்தையும் என்னிடமிருந்து நீங்கள் அபகரித்துவிட்டீர்கள். என்ன தைரியம் உங்களுக்கு?,” என்று உணர்ச்சிகள் மேலோங்க 16 வயது துன்பர்க் கூறினார். உச்ச நிலை மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எதிர்பாராத விதமாக வருகை தந்தபோது கிரேட்டா துன்பர்க் கோபத்துடன் அவரைப் பார்த்ததைக் காட்டும் காணொளி டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும் அடுத்த தலைமுறையினரைப் பற்றி தற்போதைய உலகத் தலைவர்கள் சிறிதுகூட நினைத்துப் பார்க்கவில்லை என்றும் துன்பர்க் குற்றம் சாட்டினார். நிலைமை கைமீறிப் போனால் இளையர்கள் உலகத் தலைவர்களை மன்னிக்கமாட்டார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.