பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு லண்டனில் உள்ள செயிண்ட் தாமஸ் மருத்துவமனையின் தீவர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டதை அடுத்து திரு ஜான்சன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அவருக்கு அங்கு பிராண வாயு வழங்கப்பட்டதாக பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகம் இன்று (ஏப்ரல் 7) தெரிவித்தது.
பிரதமர் ஜான்சன் சுயநினைவுடன் இருப்பதாகவும் ஒருவேளை அவருக்கு செயற்கை சுவாசக் கருவியின் உதவி தேவைப்பட்டால் அதை உடனே பெற ஏதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இக்கட்டான நிலையில் இருக்கும் பிரிட்டனை வழிநடத்த தமக்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப்பை திரு ஜான்சன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, பிரிட்டனின் கொவிட்-19 அவசரகால பணிக் குழு நடத்திய கூட்டத்துக்குத் திரு ராப் இன்று தலைமைதாங்கினார்.
பிரிட்டனில் இதுவரை 5,373 பேர் கிருமித்தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் அதிகம் இருப்பதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் அச்சம் தெரிவித்தார்.
பிரிட்டனில் தற்போது முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்கநிலைக்கான விதிமுறைகளைப் பலர் மீறுவதால் அது நீட்டிக்கப்படக்கூடும் என்று பிரிட்டிஷ் அமைச்சர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.