கொரோனா கிருமிப் பரவல் தொடங்கிய இடமாகக் கருதப்படும் வூஹானில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைவிட 10 மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும் என சீனாவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது.
ஆயினும் அங்கிருப்போரில் பலரது உடலில் அந்தக் கிருமிக்கு எதிரான நோயெதிர்ப்புக் கூறுகள் இன்னும் உருவாகவில்லை என்று கூறப்படுகிறது.
பரிசோதனை மேர்கொள்ளப்பட்டவர்களில் 4.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே கொவிட்-19க்கு காரணமான கிருமிக்கு எதிரான நோயெதிர்ப்புக் கூறுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
சீனாவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 34,000க்கும் அதிகமானோரிடம் சீரலாஜிகல் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.
இந்த ஆய்வு தொடங்கிய ஏப்ரல் மாதத்தில் அங்கு 50,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் சுமார் 11 மில்லியன் மக்கள் வசிக்கும் வூஹானில் கிட்டத்தட்ட 500,000 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடக்கத்தில் கிருமிப் பரவலை கையாண்ட விதம் குறித்து அனைத்துலக அளவில் சீனாவின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. கிருமித்தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள் வூஹானில் பதிவான குறைவான கிருமித்தொற்று எண்ணிக்கையைப் பற்றி சந்தேகம் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.