சிட்னி: உலகின் பல நாடுகளால் தேடப்படுபவரும் ஆசியாவின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் மன்னனுமான 57 வயது சி ஸி லோப் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக ஆஸ்திரேலிய அதிகாரிகள் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வலியுறுத்துகின்றனர்.
ஆஸ்திரேலிய போலிசாரின் வேண்டுகோளுக்கு இணங்க, பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த லோப்பை வெள்ளிக்கிழமையன்று டச்சு போலிசார் கைது செய்தனர். சீனாவில் பிறந்த கனடிய குடியுரிமை கொண்ட லோப் ஆசியாவின் பெரும் கடத்தல் மன்னனாக வலம் வந்தார். ஐநாவும் இவரைப் போதைப்பொருள் கும்பலின் தலைவனாக இருக்கக்கூடும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பிலிப்பீன்சில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான போரில் பாதுகாப்புப் படையினர் 13 பேரைக் கொன்றனர். இதில் போலிஸ்காரர் ஒருவரும் மாண்டார். மேலும் இரண்டு போலிசார் காயமடைந்தனர்.