இந்தோனீசியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று மட்டும் 54,517 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானார்கள். 24 மணி நேரத்தில் 991 பேர் மரணமடைந்துவிட்டார்கள். தென் கிழக்கு ஆசியாவில் கொவிட்-19 தொற்றும் மரணமும் இந்தோனீசியாவில்தான் ஆக அதிகமாக இருக்கிறது. அங்கு இதுவரை கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2.67 மில்லியனை கடந்துவிட்டது. மொத்தம் 69,210 பேர் மரணமடைந்துவிட்டனர்.
இந்தோனீசியாவில் 17,000க்கும் அதிகமான தீவுகளில் 34 மாநிலங்கள் இருக்கின்றன. அவற்றில் 500க்கும் மேற்பட்ட நகரங்களும் நிர்வாகப் பகுதிகளும் உள்ளன. பல மாநிலங்களுக்கும் நகரங்களுக்கும் நிர்வாகப் பகுதிகளுக்கும் கொவிட்-19 தொற்று பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. அந்த நாட்டின் பல வட்டாரங்களும் கிருமித்தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர முடியுமா அல்லது முடியாமல் போய்விடுமோ என்ற கவலை நிலவுவதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 10 நாட்களில் சாதனை அளவுக்கு ஒவ்வொரு நாளும் புதிதாக கிருமித்தொற்றால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தபோதிலும் செவ்வாய்க்கிழமை மட்டும் புதிதாக 47,899 பேர் தொற்றுக்கு ஆளானார்கள்.
மக்கள் நெருக்கமாக வசிக்கும் ஜாவா தீவுக்கு வெளியே 11 பகுதிகளில் டெல்டா கிருமித்தொற்று ஏற்பட்டு இருக்கிறது என்று சுகாதார அமைச்சர் புடி குனாடி சாடிகின் தெரிவித்தார்.
இதனிடையே, இந்தோனீசியாவின் பல வட்டாரங்களும் எளிதில் கிருமித்தொற்றுக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருப்பதாக இஸ்மன் முக்தார் என்ற தொற்று நோயியல் வல்லுநர் எச்சரித்தார்.
சுகாதார வசதிகளும் வளங்களும் அவசரமாகத் தேவைப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தொற்றைக் கட்டுப்படுத்துவதுதான் மிக முக்கியமானது என்று வலி யுறுத்திக் கூறினார்.
ஜாவா மருத்துவமனைகள் அண்மைய வாரங்களாக திணறி வருகின்றன.
இதனிடையே, இந்தோனீசியா கொவிட்-19 தொற்றில் இந்தியாவை விஞ்சிவிட்டதாகவும் புதிய ஆசிய தொற்று மையமாக அது உரு வெடுப்பதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இவ்வேளையில், அவசரகால நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் மூத்த அமைச்சரான லுஹாட் பின்சார், உயிர்வாயு வளங்கள் நல்ல படி நிர்வகிக்கப்பட்டு வருவதாகவும் சிங்கப்பூர், சீனாவில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட உயிர்வாயு செறிவூட்டிகள் விரைவில் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.