வெலிங்டன்: நியூசிலாந்தில் சமூக அளவில் கொவிட்-19 பாதிப்பு அறவே இல்லாத நிலை மீண்டும் ஏற்படும் சாத்தியம் மிகவும் குறைவு என்று அந்நாட்டின் சுகாதாரத்துறைத் தலைமை இயக்குநர் ஏஷ்லி புளூம்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 டெல்டா கிருமி வகைப் பரவலை முறியடிக்கும் நடவடிக்கையில் நியூசிலாந்து தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த ஆண்டு கொவிட்-19 கிருமிப் பரவலை நியூசிலாந்து வெற்றிகரமாக முறியடித்தது. அதையடுத்து, கொவிட்-19 பாதிப்பின்றி அது இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒருசிலருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது.
ஆனால் இந்த நிலை கடந்த மாதம் மாறியது. கொவிட்-19 டெல்டா கிருமி வகை மளமளவென பரவியதை அடுத்து நாடு தழுவிய முடக்கநிலைக்கு நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டன் உத்தரவிட்டார்.
நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் தற்போது முடக்கநிலை நடப்பில் உள்ளது. குறைந்த அளவிலான
அன்றாடப் பாதிப்புகள் பதிவாகின்றன.
"பாதிப்பு அறவே இல்லாத நிலையை மீண்டும் எட்டுவது சந்தேகமே. ஆனால் கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோரை அடையாளம் காணும் பணிகள் தொடரும்.
"அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரை அடையாளம் கண்டு, பரிசோதனை நடத்தி, தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
"சமூக அளவிலான கிருமிப் பரவலைத் தடுப்பதே எங்கள் இலக்கு," என்று திரு புளூம்பீல்ட் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வோர் விகிதத்தை அதிகரிப்பதே நியூசிலாந்தின் இலக்கு என்றார் அவர். மக்கள்தொகையில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் வழக்கநிலைக்குத் திரும்பலாம் என்று அவர் தெரிவித்தார்.