சீனக் கைபேசிகளைப் பயன்படுத்தினால் அவற்றை வீசி எறியுமாறும் புதிதாக சீனக் கைபேசிகளை வாங்குவதைத் தவிர்க்குமாறும் தன் மக்களுக்கு லித்துவேனியத் தற்காப்பு அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.
அந்நாட்டின் தேசிய இணையப் பாதுகாப்பு மையம், சீன நிறுவனங்களின் ‘5ஜி’ கைபேசிகளைச் சோதித்துப் பார்த்தது.
ஸியாவ்மி கைபேசி, ஓர் உள்ளமைந்த (built-in) தணிக்கை அம்சத்தைக் கொண்டுள்ளதாகவும் ஹுவாவெய் கைபேசியின் ஒரு மாதிரியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகவும் அம்மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“புதிய சீனக் கைபேசிகளை வாங்க வேண்டாம் என்பதே எங்களின் பரிந்துரை. அத்துடன், ஏற்கெனவே அவற்றை வாங்கி, பயன்படுத்தி வந்தால், கூடிய விரைவில் அவற்றை வீசியெறியுங்கள்,” என்றார் லித்துவேனியத் தற்காப்பு அமைச்சர் மார்கிரிஸ் அபுகெவிசியஸ்.
ஸியாவ்மி நிறுவனத்தின் ‘எம்ஐ 10டி’ 5ஜி கைபேசியில் இருக்கும் ஒரு மென்பொருள், திபெத், தைவான் தொடர்பான சில சொற்களைக் கண்டறிந்து, தணிக்கை செய்வதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஸியாவ்மி கைபேசிச் செயலிகளால் 449க்கும் மேற்பட்ட சொற்களைத் தணிக்கை செய்ய முடியும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அதுபோல, ஹுவாவெய் பி40 5ஜி கைபேசியில் ஒரு குறைபாட்டைச் சுட்டி, அது பயனர்களை இணையப் பாதுகாப்பு விதிமீறல்களில் சிக்க வைத்துவிடும் அபாயமுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறியுள்ளது.
ஆனால், பயனர்கள் தொடர்பான எந்த ஒரு தரவும் வெளிநிறுவனங்களுக்கு அனுப்பப்படாது என்று ஹுவாவெய் நிறுவனமும் தொடர்புகளைத் தணிக்கை செய்வதில்லை என்று ஸியாவ்மி நிறுவனமும் விளக்கம் அளித்துள்ளதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.