ஜோகூர்: மலேசியா-சிங்கப்பூர் எல்லையைத் திறப்பதற்கான அமலாக்க நடவடிக்கைகள் குறித்து ஜோகூர் அரசாங்கம் உத்தேசத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.
இந்தத் திட்டம் விரைவில் மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஜோகூர் முதல்வர் ஹஸ்னி முகம்மது தெரிவித்ததாக மலாய் மெயில் குறிப்பிட்டது. மாநிலப் பாதுகாப்பு சிறப்புக் கூட்டத்தில் உத்தேச திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜோகூர் ஊழியர்கள் பற்றி விவரங்கள் கிடைத்ததும் தடுப்பூசி போடும் நடவடிக்கை மேலும் தீவிரமாக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே கொள்ளைநோய் பரவல் காரணமாக மலேசியாவுக்கு வந்த சுற்றுப்பயணிகளின் வருகை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 83.4% சரிந்துள்ளதாக மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது. மலேசியாவுக்குக் கடந்த ஆண்டு 4.3 மில்லியன் சுற்றுப் பயணிகள் வருகை தந்தனர். ஆனால் 2019ல் 26.1 மில்லியன் பேர் மலேசியாவுக்கு வந்ததாக தலைமைப் புள்ளி விவர அதிகாரி முகம்மது உஸிர் மஹிடின் கூறினார். "நாட்டின் சுற்றுப் பயண வரலாற்றில் ஆக மோசமான சரிவு இது. கடைசியாக 'சார்ஸ்' நோய் 2003ல் தாக்கியபோது, சுற்றுப்பயணிகளின் வருகை 20.4% சரிந்தது," என்றார். அனைத்துலக அளவிலும் சுற்றுப்பயணிகளின் வருகை பெரிதும் சரிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டில் 1.47 பில்லியன் சுற்றுப்பயணிகளை நாடுகள் வரவேற்றன. ஆனால் அது 74% சரிந்து சென்ற ஆண்டு 399 மில்லியன் எனப் பதிவாகியிருந்தது. ஆசியான் நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. "சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகள் வருகை 85.7% சரிந்தது. அடுத்த நிலைகளில் மலேசியா 83.4%, தாய்லாந்து 83.2% சரிவை எதிர்நோக்கின," என்று டாக்டர் உஸிர் தெரிவித்தார்.