தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் வீழ்ந்தபோது காபூல் விமான நிலைய முள்வேலியைத் தாண்டி அமெரிக்க படைவீரர்கள் சிலரால் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட காட்சி முன்னதாக செய்திகளில் வெளிவந்திருந்தது.
அந்தக் குழந்தை பின்னர் அமெரிக்காவில் பெற்றோருடன் இணைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்தக் குழந்தையின் பெற்றோர் தற்போது அமெரிக்காவின் அரிசோனாவில் குடியேறியிருக்கிறார்கள். எட்டுவாரக் குழந்தையோடு தங்களது புதிய வாழ்வை அங்கு அவர்கள் தொடங்கியுள்ளனர். அண்மையில் ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியளித்தனர்.
குழந்தையின் தந்தை ஹமீது, காபுல் விமான நிலையத்தில் கலாசார மொழிவள உத்தியோகத்தராக அமெரிக்கப் படையினருடன் இணைந்து பணியாற்றியிருந்தார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் அவர் வீடு திரும்பமுடியாத நிலையில் காபூல் விமான நிலையத்தில் பணியில் இருந்தபோது, மனைவி சாதியாவுக்குப் பிரசவம் ஏற்பட்டது.
விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் தலிபான்களின் வசம் வீழ்ந்துகொண்டிருந்தபோது, மனைவியை உடனடியாக காபூல் விமான நிலையத்திற்கு வருமாறு ஹமீது விமான நிலையத்திலிருந்து தொலைபேசியில் தகவல் கூறியிருந்தார்.
விமான நிலையம்வரை வந்த சாதியாவால் உள்ளே நுழைய முடியவில்லை. அவர் வரும் வழியில் தலிபான்கள் அடையாள ஆவணங்களைப் பறித்துவிட்டதால், தன்னை ஹமீதின் மனைவியாக அடையாளம் காண்பிக்க முடியவில்லை.
இந்த நிலையில், பிறந்து 16 நாட்களேயான குழந்தையை முள்வேலிக் கம்பிகளைத் தாண்டி அமெரிக்கப் படையினரிடம் கையளித்திருந்தார் சாதியா. அந்தக் காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோதுதான் ஹமீது தனது குழந்தையை முதன்முதலாகக் கண்டார். அதன்பின்னர், சாதியாவும் ஒருவழியாக விமான நிலையத்திற்குள் சென்றுவிட்டார்.
தற்போது அரிசோனாவில் வசிக்கும் ஹமீது-சாதியா தம்பதியர், குழந்தைக்கு லியா என்று பெயரிட்டுள்ளார்கள். அமெரிக்க கடற்படையினரால் தமது குழந்தை காப்பாற்றப்பட்டதால், அதற்கு ‘மரின்’ என்று நடுப்பெயரை சூட்டியுள்ளார்கள்.