லண்டன்: அதிகமானோருக்குத் தடுப்பூசி போட்டு கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த பிரிட்டனில் தற்போது தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிஉள்ளது.
பிரிட்டனில் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் கடந்த குளிர்காலத்தில் கட்டுப்
பாடுகள் கொண்டு வரப்பட்டது கிருமித்தொற்று சம்பவங்கள் மேலும் அதிகரிக்காமல் இருக்க உதவி
யது.
ஆனால் கோடைகாலத்தில் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. முகக்கவசம் அணிவதும் கட்டாயமல்ல என்று கூறப்பட்டது. பள்ளிக்கூடங்கள், பணியிடங்கள் என மக்கள் கிருமிப் பரவலுக்கு முந்திய வழக்கநிலைக்குத் திரும்பினர்.
இந்நிலையில், பிரிட்டனில் மீண்டும் கிருமிப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சென்ற மாதம் 21ஆம் தேதி மூன்று மாதங்களில் ஆக அதிகமாக ஒரே நாளில் 52,000 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மற்ற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவைவிட இந்த எண்ணிக்கை அதிகமாகும்.
இருப்பினும் பிரிட்டிஷ் அரசாங்கம் கிருமிப் பரவலைக் குறைப்பதற்கான கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வருவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தொற்றுநோயை மோசமாக்கும் மூன்று முக்கிய தவறுகளை பிரிட்டன் செய்வதாகத் தெரிகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பதின்ம வயதினருக்குத் தடுப்பூசி போடுவதில் பிரிட்டன் காட்டிய சுணக்கம், கூடுதல் தடுப்பூசி போடுவதில் தாமதம், முகக்கவசத்தால் பயன் இல்லை என்ற தவறான கருத்து போன்றவை பிரிட்டனில் கிருமிப் பரவலை மோசமடையச் செய்வதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனாலும் பிரிட்டனில் தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகமாக உள்ளதால், தொற்றால் கடுமையான பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் கணிசமாக குறைந்துள்ளதை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.