கராச்சியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் ஓர் உடல் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு சிதறிக் கிடந்தது.
அருகில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார் ஒரு மாது.
மாண்டவர் 70 வயது ஆடவர்.
அவரை வெட்டிக் கொன்ற சந்தேகத்தின் பேரில் 45 வயது மாது கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் தி டான் (The Dawn) செய்தித்தாள் கூறியது.
இருவரும் கணவன் மனைவியா என்பதில் குழப்பம் நிலவுகிறது.
சதார் எனும் வட்டாரத்தில் உள்ள பழைய அடுக்குமாடிக் கட்டடத்தில் கொலை நிகழ்ந்தது.
அங்குள்ள அடுக்குமாடி வீட்டின் அருகே, மனிதக் கை ஒன்று கிடந்ததாக கராச்சி போலிசாருக்கு தகவல் கிடைத்தது.
போலிசார் அங்குச் சென்று அடுக்குமாடி வீட்டைத் திறந்து பார்த்தபோது மாது ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
அருகே துண்டுதுண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கிடந்தன.
அது மட்டுமல்ல, வீடு முழுவதும் உடல் பாகங்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன.
கொலை இந்த வாரத்தில் நடந்திருக்கலாம் என்று போலிசார் சந்தேகப்படுகின்றனர்.
அடுக்குமாடி வீட்டில் மாதின் ரத்தம் தோய்ந்த ஆடைகளும் கொலை செய்யப்பட்ட கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்களும் கிடைத்தன.
போலிசார் முதலில் விசாரித்தபோது, மாண்டவர் தமது கணவர் முகமது சொஹேல் என்று மாது கூறினார்.
பின்னர் அதை மறுத்துவிட்டு, அவர் தமது மைத்துனர் என்றார்.
போதையில் இருந்த அந்த மாது, போதை மருந்துகளை உட்கொண்டிருக்கலாம் என்று போலிசார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணையின்போது மாது காட்டிய அமைதி ஆச்சரியப்பட வைத்ததாக போலிசார் கூறினார்.
விசாரணை தொடர்கிறது.