லண்டன்: குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டாலும் ஓமிக்ரான் உருமாறிய கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல நாடுகளில் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகின்றனர்.
பெருமளவு நோயாளிகளைச் சமாளிப்பதற்காக பிரிட்டன் தற்காலிக மருத்துவமனைகளைக் கட்டி வருகிறது.
தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது நாட்டின் சுகாதாரத் துறை, போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டியுள்ளதாக தேசிய மருத்துவ அமைப்பின் இயக்குநர் ஸ்டீபன் போவிஸ் சொன்னார்.
கூடுதல் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை பிரிட்டன் எட்டிவிட்டது. இருப்பினும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக எச்சரித்துள்ளார் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
லண்டன், பிரிஸ்டோல், லீட்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள எட்டு மருத்துவமனைகளின் தரைத் தளத்தில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்படும் என்று தேசிய சுகாதார சேவை தெரிவித்தது.
இத்தாலிய மருத்துவமனைகளும் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்றார் ரோம் நகரின் கொவிட்-19 மருத்துவமனையின் இயக்குநரான மார்சே.
அந்த மருத்துவமனையின் 120 படுக்கைகளில் 111 படுக்கைகள் நிரம்பிவிட்டன.
இதற்கிடையே, கிழக்கு ஐரோப்பாவில் கொவிட்-19 காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு மில்லியனைக் கடந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
ஐரோப்பாவில் (1,873,253) ஏற்பட்ட கொவிட்-19 மரணங்களில் பாதிக்கும் மேற்பட்டவை கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் (1,045,454) ஏற்பட்டவையாகும். அதிலும் ரஷ்யா, போலந்து, உக்ரேன் ஆகிய நாடுகளில் அன்றாட மரண எண்ணிக்கை அதிகளவில் பதிவாகின்றன.
இதற்கிடையே, ஓமிக்ரான் முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவோ கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
ஏனெனில் ஓமிக்ரான் உருமாறிய கிருமியால் அங்கு ஏற்பட்ட நான்காவது அலையைக் கடந்துவிட்டதாக தென்னாப்பிரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தொற்றுக்கு ஆளாவோர் விகிதம் கிட்டத்தட்ட 30 விழுக்காடு குறைந்துவிட்டதாகவும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கையும் எட்டு மாநிலங்களில் குறைந்துள்ளதாகவும் அது கூறியது.
இதையடுத்து அங்கு இரவு நேர ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மதுபான விற்பனை நேரக் கட்டுப்பாடு கிடையாது. ஆனால் பொது இடங்களில் கட்டாய முகக்கவசம் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.
அமெரிக்காவில் இரண்டாவது நாளாக கிருமித்தொற்று சம்பவங் கள் புதிய உச்சத்தை எட்டியது. புதனன்று 488,000ஆக இருந்த தொற்று சம்பவங்கள் வியாழனன்று 580,000 மேல் பதிவானது.
இது கிருமிப் பரவல் வேகமாக அதிகரித்து வருவதைக் குறிப்பதாக உள்ளது.
இதற்கிடையே, அமெரிக்காவின் நியூஜெர்சியில் கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 60 விழுக்காடு உயர்ந்துள்ளது.