ஜெருசலேம்: ஓமிக்ரானுக்கு எதிராக நான்காவது தடுப்பூசி ஓரளவு மட்டுமே செயல்திறன்மிக்கதாக உள்ளது என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
டெல் அவிவில் உள்ள ஷீபா மருத்துவ மையத்தில் நான்காவது தடுப்பூசியின் செயல்திறன் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது 154 மருத்துவ ஊழியர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியும் 120 தன்னார்வலர்களுக்கு மொடர்னா தடுப்பூசியும் போடப்பட்டது.
தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்றும் அது கணிசமான ஆன்டிபாடிகளை உருவாக்குவதாகவும் முதல்கட்ட முடிவுகள் கூறுகின்
றன.
ஆனால் ஓமிக்ரான் உருமாறிய கிருமிக்கு எதிராக அது ஓரளவு மட்டுமே செயல்திறன்மிக்கதாக உள்ளது என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், "ஓமிக்ரானைத் தவிர மற்ற உருமாறிய கிருமிகளுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகவும் செயல்திறன்மிக்கதாக உள்ளது," என்றார் ஆய்வை வழிநடத்திய பேராசிரியர் கிலி ரெகேவ்-யோச்சே.
"நான்காவது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பலர் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகினர்," என்றார் அவர்.
எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு நான்காவது தடுப்பூசி போடுவது நல்ல விஷயம்தான். ஆனால் தற்போது உள்ளதைவிட மேலும் வயதானவர்களுக்கு நான்காவது தடுப்பூசி போடும் வகையில் திருத்தம் கொண்டுவரலாம் என்றார் அவர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காவது தடுப்பூசி போடத் தொடங்கியது இஸ்ரேல். இதுவரை 500,000 பேர் நான்காவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இனி ஏழு நாள்களுக்குப் பதிலாக ஐந்து நாள்களே தனிமைப்படுத்தப்படுவர் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, கொள்ளைநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று ஐநா தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டார்.
அனைவருக்கும் தடுப்பூசி போடப்படவில்லை என்றால், நாம் புதிய உருமாறிய கிருமிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.
2021ஆம் ஆண்டின் இறுதியில் உலகின் 40 விழுக்காட்டினருக்கும் மற்றவர்களுக்கு இவ்வாண்டின் நடுப்பகுதிக்குள்ளும் தடுப்பூசி போடப்படும் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியதையும் சுட்டிய அவர், அந்த இலக்கை எட்டும் தூரத்தில்கூட நாம் இன்னும் இல்லை என்றார்.
"ஆப்பிரிக்க நாடுகளைவிட பணக்கார நாடுகளின் தடுப்பூசி விகிதம் ஏழு மடங்கு அதிகம் உள்ளது வெட்கக்கேடானது," என்றார் குட்டரெஸ்.