ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் $50,00 நன்கொடை வழங்கும்.
ஆப்கானிஸ்தானை நேற்று ரிக்டர் அளவில் 5.9 புள்ளியாக பதிவுசெய்யப்பட்ட நிலநடுக்கம் உலுக்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மடிந்தனர். தேடல், மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்து, சுகாதாரப் பொருள்கள் வாங்க செஞ்சிலுவைச் சங்கத்தின் நன்கொடை பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
பொதுமக்களிடையே நன்கொடை திரட்டவும் திட்டமிருப்பதாக சங்கம் தெரிவித்தது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்றடைய அதிகாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். முறையான தொடர்புச் சாதனங்கள் இல்லாதது, மோசமான சாலை இணைப்புகள் ஆகிய காரணங்களால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாட்டு அமைப்பு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா போன்றவை ஆப்கானிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளன. சுகாதாரக் குழுக்களோடு, உணவு, மருந்து, கூடாரங்கள் போன்றவற்றை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப ஐக்கிய நாட்டு அமைப்பு தயாராகி வருகிறது.
ஏற்கெனெவே தலிபான்கள் ஆஃப்கானிஸ்தானை சென்ற ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியதிலிருந்து அங்குள்ள மக்கள் நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர்.