ஜெனிவா: உலகம் முழுவதும் இவ்வாண்டு இதுவரை 5,322 பேரிடம் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறித்து தன்னிடம் தெரியப்படுத்தப்பட்டு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. குரங்கம்மை தொற்றில் 85 விழுக்காடு ஐரோப்பாவில் கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று வேகமாக அதிகரித்தாலும், உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால குழு இரண்டாவது முறையாக சந்திப்பு நடத்த இன்னும் தேதி நிர்ணயிக்கவில்லை.
எட்டு நாள்களில் குரங்கம்மை தொற்று 56 விழுக்காடு கூடியுள்ளது. தற்போது 53 நாடுகளில் குரங்கம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நீண்டகாலமாகவே நிரந்தர நோயாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த மே மாதத் தொடக்கத்திலிருந்து மற்ற நாடுகளிலும் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
"குரங்கம்மை பரவலைக் கட்டுப்படுத்த, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் மீது கவனம் செலுத்துமாறு உலக நாடுகளிடம் சுகாதார நிறுவனம் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறது," என்றார் நிறுவனத்தின் பேச்சாளர் ஃபடிலா சாயிப்.