95% குரங்கம்மை தொற்று சம்பவங்கள் பாலியல் நடவடிக்கைகள் மூலம் பரவின: ஆய்வு

95% குரங்கம்மை தொற்று சம்பவங்கள் பாலியல் நடவடிக்கைகள் மூலம் பரவின: ஆய்வு

2 mins read
5c077c72-213f-4975-9e6f-de205653d6b9
-

குரங்கம்மை தொற்றுச் சம்பவங்களில் 95% பாலியல் நடவடிக்கைகளால் பரவின என்று நேற்று (ஜூலை 21) வெளியான நியூ இங்கிலாந்து மருத்துவ ஆய்விதழ் (New England Journal of Medicine) ஒன்று தெரிவித்தது.

குரங்கம்மை குறித்து நடத்திய ஆய்வுகளில் இதுவே மிகப்பெரிய ஆய்வாகும். இதே ஆய்வில் குரங்கம்மைக்கு புதிய அறிகுறியாக பிறப்புறுப்பில் புண்கள் (single genital lesions) கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆய்வில் கண்டறியப்பட்ட பாதிப்புகளில் மற்ற ஆண்களுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆண்களுக்கே பெரும்பாலும் குரங்கம்மை தோற்று வருவதாக தெரியவந்துள்ளது. பாலியல் நடவடிக்கை மூலம் குரங்கம்மை தொற்றடைந்த நபர்களில் 98 விழுக்காட்டினர் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட ஆண்கள் ஆவர். அதில் 41 விழுக்காட்டினர் எச்ஐவி தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அவர்களின் சராசரி வயது 38 என்றும் ஆய்வில் இருந்தது.

குரங்கம்மை பரவலை உலகளவில் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கலாமா வேண்டாமா என்று உலக சுகாதார அமைப்பு கலந்தாய்ந்துகொண்டு இருக்கும் வேளையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. உலக சுகாதார அமைப்பு அறிவிக்கும் எச்சிரிக்கை நிலைகளில் ஆகா தீவிரமானது இதுவாகும்.

ஏப்ரல் 27 முதல் ஜூன் 24, 2022 வரை லண்டனிலுள்ள குவீன் மேரி பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வில் 16 நாடுகளைச் சேர்ந்த 528 குரங்கம்மை நோயாளிகள் ஈடுபட்டிருந்தனர்.

குரங்கம்மை பொதுவாக உடலுறவின் மூல பரவுவதில்லை என்பதையும் அது பாலியல் அல்லாது எந்த விதமான தொடுதல் மூலமும் பரவலாம் என்பதையும் ஆய்விதழ் எழுத்தாளர் ஜான் தோர்ன்ஹில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இவ்வாய்வு குரங்கம்மை எவ்வாறு பரவுகிறது என்றும் எந்த பிரிவினருக்கிடையே பரவுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி அதைப் பற்றிய புரிதலை அதிகரித்துள்ளது என்றார். இப்புரிதலைக் கொண்டு தொற்றை விரைவாகக் கண்டறிய முடியும் என்றும் தொற்று வரும் முன் காத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.