பெலோசியின் தைவான் பயணம் குறித்த பேச்சால் சீனா கடுஞ்சினம்
பெய்ஜிங்: தைவானுக்குப் பயணம் செய்வது குறித்து அமெரிக்கா உறுதியாக இருந்தால், தமது ராணுவம் ஒன்றும் சும்மா இருக்காது என்று சீனா எச்சரித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நேன்சி பெலோசி தைவானுக்குப் பயணம் செய்யக்கூடும் என்ற பேச்சு தொடங்கியதில் இருந்து, கடும் சினங்கொண்டுள்ள சீனா, அமெரிக்காவைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.
இந்தப் பயணத்தைத் தைவானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அரசதந்திர உறவை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக சீன அதிகாரிகள் சிலர் கருதுகின்றனர்.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன், "பெலோசி தைவானுக்குப் பயணம் மேற்கொண்டால், சீனா உறுதியான, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
"இதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அமெரிக்காவே முழு பொறுப்பு ஏற்கவேண்டும்," என்று எச்சரித்தார்.
சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் டான் கெஃபி, "தைவானுக்குச் செல்வது குறித்து அமெரிக்கா உறுதியாக இருந்தால், சீன ராணுவம் ஒன்றும் சும்மா இருக்காது.
"தைவான் விவகாரத்தில், வெளிநாடுகளின் தலையீட்டையும் அவற்றின் பிரிவினைவாத முயற்சிகளையும் முறியடிப்பதற்கு ராணுவம் வலுவான நடவடிக்கைகளை எடுக்கும்," என்று தெரிவித்ததாக பிபிசி செய்தி சொன்னது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் இன்று தொலைபேசியில் பேசவுள்ளதாக அது பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த உரையாடலின்போது தைவான் விவகாரம், ரஷ்யப் படையெடுப்பு, பொருளியல் விவகாரம் ஆகியவை குறித்து பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் போட்டியைச் சமாளிப்பது குறித்தும் பேசப்படும் என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். ஆனால், வரி குறித்து பேசுவதற்கான வாய்ப்பு குறைவு என்றார் அவர்.