பெய்ஜிங்: அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் நேன்சி பெலோசியின் தைவான் பயணத்தைக் கண்டிக்கும் வகையில் சீனாவுக்கான அமெரிக்கத் தூதரை அழைத்து எச்சரித்தது சீனா.
அமெரிக்கத் தூதர் நிக்கலஸ் பர்ன்ஸ் உடனான சந்திப்பின்போது சீனாவின் துணை வெளியுறவு அமைச்சர் ஸி ஃபெங் பெலோசியின் தைவான் வருகைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"இது மிகவும் மோசமான செயல் என்றும் இதற்கான விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும்," என ஸி சொன்னதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனது தவறுகளுக்கு அமெரிக்கா உரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் சொன்னார்.
"தன் தவறுகளை அமெரிக்கா உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
"அத்துடன் பெலோசியின் தைவான் வருகையால் ஏற்பட்ட பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளவேண்டும்," என்றும் ஸி சொன்னதாக சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, பெலோசியின் தைவான் பயணம் தேவையற்றது என்றும் இந்தப் பயணத்தால் வெளியுறவுக் கொள்கை நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை என்றும் சிங்கப்பூரில் உள்ள அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வாங் கங்வு, "இந்தப் பயணம் தேவையற்றது," என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.
"இந்தப் பயணம் சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
"வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கான வழி இதுவல்ல," என்றார் அவர்.
முன்னாள் மூத்த தூதர் பிலஹரி கௌசிகன், "பெலோசியின் தைவான் பயணம் உண்மையில் பதற்றத்தையும் அவநம்பிக்கையையும் மட்டுமே அதிகப்படுத்தியுள்ளது.
"இதனால், அமெரிக்கா-சீனா இடையே நிலவும் போட்டித்தன்மை வரும் மாதங்களில் மேலும் மோசமடையக்கூடும்," என்றார் அவர்.
சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் சூழல், சீனா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு ஆகியவற்றுக்கு மத்தியில் பெலோசியின் இந்தப் பயணம் இருநாட்டு உறவை மேலும் மோசமாக்கும் என்று கருதப்படுகிறது.