வாஷிங்டன்: பெரியவர்களையும் குழந்தைகளையும் கொவிட்-19 கிருமி தொற்றும் பட்சத்தில் இனி அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளான குழந்தைகள், பரிசோதனையில் 'தொற்று இல்லை' எனச் சான்று பெற்றால் மட்டுமே வகுப்பறைக்கு அல்லது குழந்தைப் பராமரிப்பு மையங்களுக்குத் திரும்ப முடியும் என்ற விதிமுறையையும் அம்மையம் மீட்டுக்கொண்டது.
"பள்ளிகள் கிருமிப்பரவல் அபாயம் தொடர்பான இடர் மதிப்பீட்டை மேற்கொள்வதையும் தங்கள் பணியாளர்களையும் மாணவர்களையும் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுப்பதையும் இந்தத் தளர்வுகள் எளிதாக்கும்," என்று அம்மையத்தின் நோய்த்தொற்றியல், தடுப்புப் பிரிவின் தலைவர் கிரேட்டா மஸெட்டி கூறினார்.
அத்துடன், பணியிடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தும் விதியிலும் அது மாற்றம் செய்துள்ளது.
முன்னதாக, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரை மட்டுமே பரிசோதனைக்கு உட்படுத்தும்படி அது பரிந்துரைத்து வந்தது.
இந்நிலையில், பணியிடங்களில் பரிசோதனை நடைமுறை நடப்பில் இருந்தால், தடுப்பூசி போட்டுக்கொண்டோர், போடாதோர் என்ற பாகுபாடின்றி, அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றியதன் அல்லது தடுப்பூசி மூலம் மக்கள்தொகையில் 95 விழுக்காட்டினர் பாதுகாப்பு பெற்றுள்ளதாகத் தரவுகள் காட்டுவதை அடுத்து, இந்த மாற்றங்கள் இடம்பெறுவதாக டாக்டர் மஸெட்டி குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்றியவர்கள் உட்புறங்களில் இருக்கும்போது முகக்கவசம் அணியுமாறும் அறிகுறிகள் ஏதேனும் தெரிகின்றனவா என்று பத்து நாள்களுக்குக் கண்காணிக்குமாறும் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றியபின் ஐந்து நாள்களுக்குப் பிறகு அல்லது அறிகுறிகள் தெரிந்தவுடன் பரிசோதனை செய்துகொள்ளுமாறும் அம்மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர், போடாதோர் என அனைவருக்கும் இந்த வழிகாட்டி நெறிமுறைகள் பொருந்தும்.
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிவிக்க வேண்டாம் என்று அந்த மையம் அறிவுறுத்தியுள்ளது.