மாஸ்கோ: தனது ஆக்கிரமிப்பின்கீழ் இருந்த நான்கு உக்ரேனியப் பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா அந்நாட்டின்மீது புதிய தடைகளை விதித்துள்ளது.
ஆனாலும், எண்ணெய், எரிவாயு மூலமாக ரஷ்யா வருவாய் ஈட்டி வருவதால், அமெரிக்காவின் புதிய தடைகள் நடைமுறையில் ரஷ்யப் பொருளியல்மீது மிகக் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு அரசியல், பொருளியல் ஆதரவு வழங்குவது பற்றி அல்லது ரஷ்யாவின் இணைப்பு நடவடிக்கையை நியாயப்படுத்தி, தற்காக்க நினைக்கும் நாடுகள்
மீதும் அமெரிக்கா பொருளியல் தடைகளை விதிக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
ஆனால், ரஷ்யாவை மேலும் தனிமைப்படுத்த இப்படி ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் நாடுகளுக்குத் தடைகள் விதிப்பதாக எச்சரிக்கை விடுத்தால் மட்டும் போதாது என்றும் அதுபற்றி தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்றும் அமெரிக்க முன்னாள் நிதியமைச்சு அதிகாரி டேனியல் டேனபாம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, உக்ரேனின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டதை ஒருபோதும் அங்கீ
கரிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் புதிய தடைகள் ஏற்கெனவே வலுவிழந்துள்ள ரஷ்ய ராணுவத் தொழில்துறையை மேலும் வலுவிழக்கச் செய்யும் என்றும் ரஷ்யாவின் பொருளியல் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில் அதன் நிதிக் கட்டமைப்பைக் குறிவைத்து அத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் அமெரிக்க நிதியமைச்சர் ஜேனட் யெலன் கூறியுள்ளார்.
அதே வேளையில், மற்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய்யையும் எரிபொருளையும் வாங்குவதைத் தடுக்க மாட்டோம் என்று அமெரிக்க நிதியமைச்சு கூறியுள்ளது. இதனை அமெரிக்கா விதித்துள்ள தடைகளில் காணப்படும் பலவீனமாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
"தடைகளில் காணப்படும் முரண்பாடு இது," என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரான செனட்டர் பில் கேசிடி குறிப்பிட்டார்.
"அனைத்துலக அளவில் எண்ணெய் விலை உயர்ந்துவிட்ட நிலையில், எண்ணெய்யையும் இயற்கை எரிவாயுவையும் விற்று ரஷ்யா பெரும்பணம் ஈட்டி வருகிறது," என்றார் திரு கேசிடி.
உக்ரேனுக்கு மேலும் உதவி
இதற்கிடையே, உக்ரேனுக்கு மேலும் 12.3 பில்லியன் அமெரிக்க டாலர் (S$17.6 பி.) மதிப்பிலான உதவிகளை வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யாவுடன் போரிட்டு வரும் உக்ரேனுக்கு இவ்வாண்டில் இதற்குமுன் 54 பில்லியன் அமெரிக்க டாலர் உதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரேனுக்கு மேலும் 530 மில்லியன் அமெரிக்க டாலர் (S$759 மி.) மதிப்புடைய நிதியுதவியை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
உக்ரேன்மீது ரஷ்யா படை
யெடுக்கத் தொடங்கியதுமுதல் இதுவரை உக்ரேனுக்கு 13 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது உலக வங்கி.
இந்த நிதியுதவிக்கு பிரிட்டனும் (US$500 மி.) டென்மார்க்கும் (US$30 மி.) பங்களித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்தது.