கியவ்: உக்ரேனில் அனைத்துலக சட்டத்தை மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்ட பகுதிகளில் உள்ள ஸபோரிஸியா என்ற நகரில் நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் 49 பேர் காயமடைந்ததாகவும் அந்த நகரின் ஆளுநர் தெரிவித்தார். மாண்டவர்களில் ஆறு சிறுவர்களும் அடங்குவர் என்றார் அவர்.
ரஷ்யப் படைகள் இரவு நேரத்தில் புகுந்து குடியிருப்புக் கட்டடங்களிலும் குடிமை நிலைகளையும் தாக்கியதாக உக்ரேன் ராணுவம் அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
ஸபோரிஸியா வட்டாரத்தில் அணு ஆலை ஒன்று இருக்கிறது. பல மாதங்களாக அந்த ஆலையை ரஷ்யா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
அந்த நகரில் இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, அந்த அணு ஆலைக்கான மின்சாரம் தடைபட்டதாகவும் ஆனால் உடனடியாக டீசல் இயந்திரங்கள் மூலம் மின்சாரம் மீண்டும் கிடைத்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில், உக்ரேனின் கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக முக்கிய நகரம் ஒன்றை ரஷ்யா கைப்பற்ற முயல்வதாகவும் அதை எதிர்த்து உக்ரேனிய தரப்புகடுமையாக மோதி வருவதாகவும் காணொளியில் உக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கி கூறினார்.
நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள நிலப்பகுதிகளை உக்ரேன் மீண்டும் கைப்பற்றிவிட்டபோதிலும் உக்ரேனிய தரப்பின் முன்னேற்றம் மெதுவடைந்துள்ளது என்றார் அவர்.
இவ்வேளையில், ரஷ்யாவுக்கும் கிரைமியாவுக்கும் இடைப்பட்ட மிக முக்கியமான பாலத்தில் நேற்று போக்குவரத்து ஒரு பகுதி தொடங்கியதாகத் தெரிவிக்கப்
பட்டது.
இதைக் காட்டும் ஒரு காணொளியை ரஷ்யா வெளியிட்டது. அந்தப் பாலத்திற்கான பாதுகாப்பைப் பலப்படுத்தும்படி ரஷ்ய அதிபர் புட்டின் உத்தரவிட்டு இருக்கிறார்.
ஐரோப்பாவின் ஆகப் பெரிய 19 கி.மீ. நீளமுள்ள பாலமான அந்தப் பாலத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்த வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரைமியா தீபகற்பத்தை 2014ஆம் ஆண்டில் ரஷ்யா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
அதன் நினைவாக அந்தப் பாலம் கட்டப்பட்டது. தெற்கு உக்ரேனில் போராடும் ரஷ்ய வீரர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுசெல்ல அதுவே மிக முக்கிய வழி.