மாஸ்கோ: கிரைமியா பகுதியையும் ரஷ்யாவையும் இணைக்கும் கெர்க் பாலத்தைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் எட்டு பேரைக் கைதுசெய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐந்து ரஷ்யர்களும் மூன்று உக்ரேனிய குடிமக்களும் கைதுசெய்யப்பட்டனர். தாக்குதலுக்குப் பின்னால் உக்ரேனின் திட்டம் இருப்பதாக ரஷ்யா கூறுகிறது.
அதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரேனின் டொனியெட்ஸ்க் வட்டாரத்தில் இருக்கும் சந்தை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குறைந்தது எழுவர் மாண்டனர். மேலும் எட்டு பேராவது காயமடைந்ததாகவும் டொனியெட்ஸ் ராணுவத் தலைவர் பாவ்லோ கைரிலெங்கோ தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சந்தைக்கு அதிகமானோர் வந்து செல்லும் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்நிலையில், உக்ரேன் மீதுள்ள அன்பை ஆயுதங்களை வழங்கி வெளிப்படுத்துமாறு அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு பிரான்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதைச் சித்திரிக்கும் வகையில் உக்ரேனின் தற்காப்பு அமைச்சு சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்தது.
பாரிஸ் போதுமான உதவி வழங்கவில்லை என்ற குறைகூறலுக்கு மத்தியில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையே, அடுத்த மாதம் 18, 19ஆம் தேதிகளில் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஏபெக் எனும் ஆசிய பசிபிக் பொருளியல் அமைப்பின் சந்திப்பில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.