இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நிதிஉதவி பெற அந்நாட்டு அரசாங்கத்துக்கும் அனைத்துலகப் பண நிதியத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை எதிர்பார்த்த வண்ணம் போகவில்லை. அதனால் நிதியுதவிடத் திட்டம் வரையப்படவில்லை.
பாகிஸ்தான் மோசமான பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்குகிறது. அனைத்துலகப் பண நிதியம் நிதியுதவி வழங்கியிருந்தால் அது நெருக்கடியைச் சமாளிக்கக் கைகொடுத்திருக்கும்.
பேச்சுவார்த்தை நடத்த நிதியத்தின் அதிகாரிகள் சென்ற வாரம் பாகிஸ்தான் சென்றிருந்தனர். பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி போகாத நிலையில் அவர்கள் அந்நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளனர்.
மெய்நிகரில் பேச்சுவார்த்தை தொடரும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பல நாடுகளிடம் கடன்பட்டுள்ளது. அதன் அரசியல் சூழலும் களேபரமாக உள்ளது. இந்நிலையில் அதன் பொருளியல் சீர்குலைந்துபோகும் நிலையில் உள்ளது.
பாகிஸ்தானில் பணவீக்கம் பெரிதும் மோசமடைந்துள்ளது. பாகிஸ்தான் நாணயத்தின் மதிப்பும் சரிந்துள்ளது. இறக்குமதிப் பொருள்களுக்குக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் நாடு இருக்கிறது.
அனைத்துலகப் பண நிதியத்திடமிருந்து பாகிஸ்தான் 1.2 பில்லியன் டாலர் (1.6 பில்லியன் வெள்ளி) நிதியுதவிப் பெறத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், அதற்கான நிபந்தனைகள் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் முன்னதாகக் கூறியிருந்தார்.