ஒட்டாவா: பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய உளவுத்துறைக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நம்பகமான தகவல்களை தான் நாடுவதாக கனடா கூறியுள்ளது.
கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட அவசரநிலை அறிக்கையில், கனடியக் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதில் வெளிநாட்டு அரசாங்கம் சம்பந்தப்பட்டிருப்பது, “நம் இறையாண்மை அத்துமீறப்பட்ட ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்,” என்று வர்ணித்தார்.
இந்நிலையில், கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா பதிலடி தந்துள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கனடாவில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் இந்திய அரசாங்கம் சம்பந்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவது அடிப்படை ஆதாரமற்றது, உள்நோக்கம் உடையது.
“ஜனநாயக ஆட்சி அமைப்புமுறையைக் கொண்டுள்ள நாங்கள், சட்ட விதிமுறைக்கு வலுவான கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்று கூறியது.
ஜூன் 18ஆம் தேதி பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய கோயில் ஒன்றுக்கு வெளியே திரு ஹர்தீப் சுட்டுக் கொல்லப்பட்டார்.
காலிஸ்தான் எனும் சுதந்திர சீக்கிய தேசத்தை உருவாக்குவதில் திரு ஹர்தீப் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். அவரைத் ‘தேடப்படும் பயங்கரவாதி’யாக இந்தியா அறிவித்திருந்தது.
புதுடெல்லியில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி20 உச்சநிலை மாநாட்டிற்கு இடையே இந்த விவகாரத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தாம் எடுத்துக் கூறியதாக திரு ட்ரூடோ கூறினார்.
இந்தப் பிரச்சினை குறித்து ஆராய கனடாவுடன் ஒத்துழைக்கும்படி இந்திய அரசாங்கத்திடம் தாம் வலியுறுத்தியதாக அவர் சொன்னார்.
கனடாவில் சீக்கியர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது தொடர்பில் ஜி20 மாநாட்டில் திரு ட்ரூடோவிடம் திரு மோடி கவலை தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, இந்தியாவின் உயர் உளவுத்துறை அதிகாரியை கனடா திங்கட்கிழமை வெளியேற்றியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்தார். ஆனால், அது குறித்த மேல்விவரங்களை அவர் வழங்கவில்லை.
ஒட்டாவாவில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்டதற்குப் பதிலளிக்கவில்லை.
மற்றொருபுறம், இந்தியாவுக்கான கனடியத் தூதரை அழைத்த இந்திய வெளியுறவு அமைச்சு, மூத்த கனடிய அரசதந்திரி ஒருவரை நீக்குவது குறித்த அதன் முடிவை அறிவித்தது.
“சம்பந்தப்பட்ட அரசதந்திரி அடுத்த ஐந்து நாள்களுக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்,” என்று வெளியுறவு அமைச்சின் இணையப்பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
திரு ட்ரூடோவின் கருத்துகள், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பதற்றநிலையை அதிகரித்துள்ளன.