நோம்பென்: கம்போடியாவில் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்ட இரண்டு வயதுச் சிறுமி உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கம்போடியாவில் இரண்டு நாள்களில் இருவர் பறவைக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டு மாண்டுவிட்டனர்.
அண்மைக் காலமாகப் பாலூட்டிகளுக்குப் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் விழிப்புடன் இருக்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
எனினும், மனிதர்களுக்குத் தொற்று ஏற்படும் சாத்தியம் குறைவு என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மாண்ட சிறுமியின் பெயர் தெரிவிக்கப்பட்டவில்லை. அவர் கம்போடியாவின் பிரே வெங் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு எச்5என்1 தொற்று ஏற்பட்டது என்றும் கம்போடிய சுகாதார அமைச்சு கூறியது.
ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்வே ரியெங் மாநிலத்தில் 50 வயது ஆடவர் ஒருவரும் பறவைக் காய்ச்சலால் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கம்போடியாவில் கடந்த 20 ஆண்டுகளில் பறவைக் காய்ச்சலால் 59 பேர் உயிரிழந்தனர். மாண்ட இரண்டு வயதுச் சிறுமியின் வீட்டில் சில கோழிகள் இறந்ததாக சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.
பொதுவாக, பறவைகளுடன் நேரடித் தொடர்பு ஏற்படும்போது பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவக்கூடும்.