பராமரிப்புப் பணிகளால், ஜோகூரின் சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவு நிலைய கட்டடத்தில் 10 மணிநேர மின்தடை ஏற்பட்டது. அதனால் நீண்ட வாகன நெரிசலுடன் மக்கள் வரிசைகளும் உருவாகின. கடந்த டிசம்பர் 5, 6 ஆகிய இரு நாட்களுக்கு இடைப்பட்ட 10 மணி நேரம் நீடித்த மின்தடை, அம்மாநில முதல்வர் ஓன் ஹாஃபிஸ் காஸியை கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இச்சம்பவம் பயணிகளுக்கு சிரமத்தை கொடுத்ததுடன், மாநிலத்துக்கு அவமானத்தை சேர்த்துள்ளது என்று பேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் “தெனாகா நாசினல்” என்ற மலேசிய தேசிய மின் உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட கடிதத்தின் படத்தையும் அவர் இணைத்திருந்தார். அந்தக் கடிதத்தில் சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்திலும் சுங்கத்துறை குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் வளாகத்திலும் டிசம்பர் 5 இரவு 8 மணி முதல் டிசம்பர் 6, அதிகாலை 4 மணி வரை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடையை எதிர்பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் 5 அன்று இரவு 11.10 மணிக்கு ‘மலேசியா-சிங்கப்பூர் பார்டர் கிராசர்ஸ் குரூப்’ என்ற பெயருடைய ஃபேஸ்புக் பயனீட்டாளர், ஒரு காணொளியை பதிவேற்றியிருந்தார். அதில் அதிகாரிகள் இருந்த இடத்தில் மட்டும் விளக்குகள் எரிந்ததையும், மற்ற பகுதிகள் எல்லாம் இருட்டில் செயல்பட்ட ஜோகூர் குடிநுழைவு நிலையத்தைக் காணமுடிந்தது. மக்கள் கடந்து செல்லக்கூடிய மின்கதவுகளையும் மின்தடை பாதித்து செயலிழக்கச்செய்துள்ளது.
ஜோகூர் குடிநுழைவுச் சோதனைச்சாவடியில் மின்தடை டிசம்பர் 6 அன்று படிப்படியாக காலை 9.20 மணிமுதல் வழக்க நிலைக்குத் திரும்பியது.
சிங்கப்பூருக்கு வாரம் 5 முறை வேலைக்கு வந்துசெல்லும் வர்த்தக மேம்பாட்டு அதிகாரியான அலிஷியா யோங் புதன்கிழமை காலை 7 மணிக்கு அக்குடிநுழைவுச் சாவடிக்கு வந்தபோது, மின் இணைப்பு இல்லாததை உணர்ந்ததாக தி ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலால் நிலையத்தில் மிகவும் புழுக்கமாக இருந்ததால் பலர் ஜோகூருக்குத் திரும்பிச் சென்றதாகவும் அவர் கூறினார். பிப்ரவரி மாதம் தொடங்கி அன்றாடம் அவ்வழியே பயணிக்கும் திருவாட்டி அலிஷியா, வழக்கமாக 10 நிமிடத்தில் கடந்து செல்லக்கூடிய நிலையத்தைக் கடக்க முதன்முறையாக தமக்கு 30 நிமிடம் ஆனது என்றும் விவரித்தார்.
சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், தனது ஃபேஸ்புக் பதிவில் மலேசியாவில் தொடங்கிய நெரிசலால் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியைக் கடக்க அதிக நேரமாவதாக பதிவிட்டிருந்தது.