கிள்ளான்: சிலாங்கூரிலுள்ள வீட்டுக் கழிவறையில் மாது ஒருவரது உடல் சிமெண்ட்டில் புதையுண்ட கோலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் இந்திய நாட்டவர் என்று மலேசியக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டிற்குப் பழுதுபார்ப்பு வேலைக்காகச் சென்ற வெளிநாட்டு ஊழியர், டிசம்பர் 3ஆம் தேதியன்று இரவு 10.58 மணிக்கு உடலைக் கண்டுபிடித்தார்.
இரண்டு வெளிநாட்டவர் வீட்டை ஈராண்டுகளாக வாடகைக்கு எடுத்திருந்தனர் என்று ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
அடுத்தவருக்கு வீட்டை வாடகைக்கு விடுவதற்குமுன் வீட்டு உரிமையாளர் வீட்டைச் சோதனையிட்டார்.
அப்போது கழிவறையில் சிமெண்ட் மூடப்பட்ட தண்ணீர்த் தொட்டியைக் கண்டார்.
ஓர் எலியின் இறந்த உடலிலிருந்து தொட்டிக்குள் திரவம் கசிவதாக அப்போது வாடகைக்கு இருந்தவர் காரணம் கூறியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர், கூரைப் பகுதியைச் சரிசெய்வதற்காக வீட்டு உரிமையாளர் இரண்டு வெளிநாட்டவரை வேலைக்கு வைத்தார்.
அந்த ஊழியர்கள் தண்ணீர்த் தொட்டி சிமெண்ட்டில் பதுக்கி வைக்கப்பட்ட உடல் குறித்து வீட்டு உரிமையாளருக்குத் தெரியப்படுத்தியதை அடுத்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
தண்ணீர்த் தொட்டியை உடைத்த பிறகு உடல் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட மாது தமது 30 வயதுகளில் இருந்தவர் என்றும் 1.6 மீட்டர் உயரமுடையவர் என்றும் சிலாங்கூர் தலைமைக் காவல்துறை அதிகாரி ஹுசேன் ஓமார் கான் குறிப்பிட்டார்.
“இந்திய தூதரகத்திடமிருந்து கூடுதல் விவரங்களைப் பெற்றபின் மாதின் குடும்பத்தைத் தொடர்புகொள்வோம்,” என்றார் அவர்.
வீட்டில் இதற்குமுன் வசித்து வந்த ஆடவரின் காதலி இந்த மாது என்று டிசம்பர் 9ஆம் தேதியன்று திரு ஹுசேன் தெரிவித்தார்.
மாதின் கொலை தொடர்பில் விசாரணைக்குக் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் இரு சந்தேக நபர்களில் ஒருவர் இந்திய நாட்டவர் என்றும் கூறப்பட்டது.
சந்தேக நபர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்கு இந்திய தூதரகம், இந்திய காவல்துறை ஆகியவற்றின் உதவியை மலேசிய காவல்துறையினர் நாடுகின்றனர்.
விசாரணையில் உதவக் காவல்துறையினர் 10 சாட்சிகளைத் தொடர்புகொண்டதாகக் கூறப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட மாதின் தோற்றத்தை இந்த சாட்சிகள் கூறியதைக் கொண்டு காவல்துறையினர் சித்திரமாக வடித்துள்ளனர்.
இதற்கு முன் மாதின் மரணம் தொடர்பில் 53 வயது வெளிநாட்டவர் ஒருவரைக் காவல்துறையினர் தடுப்புக் காவலில் வைத்ததுடன் மேலும் இரு வெளிநாட்டவரைத் தேடிக் கண்டுபிடித்ததாக அறியப்படுகிறது.