வாஷிங்டன்: போர்ட்லேண்டிலிருந்து ஜனவரி 5ஆம் தேதி, 177 பேருடன் புறப்பட்ட அலாஸ்கா ஏர்லைன்சின் போயிங் 737-9 மேக்ஸ் விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் வெள்ளிக்கிழமை மாலை 5:26 மணிக்கு (உள்ளூர் நேரம்) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவானில் பெயர்ந்து விழுந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
விமானத்தின் ஒரு சன்னலும் பக்கச் சுவரின் ஒரு பகுதியும் இல்லாமல் இருப்பதை சமூக ஊடகப் பதிவுகள் காட்டின. ஆக்ஸிஜன் முகக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்காவின் தேசிய போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 1282 போர்ட்லேண்டில் இருந்து ஒன்டாரியோ, (கலிபோர்னியா)க்கு சென்று கொண்டிருந்தபோது இன்று மாலை ஒரு பிரச்சினையை எதிர்கொண்டது. 171 பயணிகள், 6 பணியாளர்களுடன் போர்ட்லேண்ட் அனைத்துலக விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது,” என்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் தனது எக்ஸ் ஊடகப் பதிவில் குறிப்பிட்டது.
விமானச் சிப்பந்திகள் காற்றழுத்தப் பிரச்சினை குறித்து புகாரளித்ததாக (எஃப்ஏஏ) தெரிவித்தது. அது குறித்து விசாரிப்பதாக அது கூறியது.
பாதிப்பு குறித்து உடனடித் தகவல் இல்லை.
அந்த விமானம் 16,000 அடி உயரத்திற்குமேல் பறந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது என்று நிகழ்நேர விமான இயக்கத்தின் கண்காணிப்பு அமைப்பான ‘ஃபிளைட்ரேடார்24’ சமூக ஊடகப் பதிவு மூலம் தெரிவித்தது.
எஃப்ஏஏ தரவுகளின்படி, புதிய மேக்ஸ் 9 அக்டோபர் பிற்பகுதியில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு நவம்பர் முற்பகுதியில் சான்றளிக்கப்பட்டது.
“இத்தகைய சம்பவங்கள் அரிது என்றாலும், நமது விமானச் சிப்பந்திகள் நிலைமையைப் பாதுகாப்பாக சமாளிக்க பயிற்சி பெற்ற தயாராக இருந்தனர்,” என்று அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். விவரங்கள் கிடைத்ததும் மேலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்,” என்று அது கூறியது.
அவசரகால தரையிறக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக போயிங் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
“அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் 1282 சம்பந்தப்பட்ட சம்பவம் பற்றி எங்களுக்குத் தெரியும், ” என்று அந்நிறுவனம் தெரிவித்தது. “கூடுதல் தகவல்களைத் திரட்ட செயல்பட்டு வருகிறோம். போயிங் தொழில்நுட்பக் குழு ஒன்று விசாரணைக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது,” என்று அது குறிப்பிட்டது.
விமானத்தின் வெளிப்புறத் தோற்றத்தைக் காட்டுப் புகைப்படங்கள், விமானத்தின் அவசர வாயில் கதவு ஒன்று கழன்றிருந்ததைக் காட்டுகின்றன என்று ஃப்ளைட்ராடார்24 அதன் இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
மேக்ஸ் 9 விமானம் இறக்கைகளுக்கு பின்னால் ஒரு கதவைக் கொண்டுள்ளது. இது நெரிசலான இருக்கை அமைப்புகளின்போது, அவசரகால வெளியேற்றத்துக்குச் “செயல்படுத்தப்படலாம்” என்று ஃப்ளைட்ராடார்24 கூறியது. எனினும், அக்கதவு அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஜெட் விமானங்களில் நிரந்தமாக மூடப்பட்டு, செயலிழந்த நிலையிலேயே வைத்திருக்கப்படும்.