ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் உள்ள மூன்று அரசாங்க அமைப்புகளுக்கு மின்னஞ்சல் வழியாக பிப்ரவரி 12ஆம் தேதி காலையில் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டன.
விடுமுறை முடிந்து வேலைக்குத் திரும்பியோர் அந்த மின்னஞ்சல்களைக் கவனித்துவிட்டதாக ஜோகூர் பாரு காவல்துறையினர் தெரிவித்தனர்.
“ஜோகூர் பாரு நகர மன்றம், ஜோகூர் காவல்துறை தலைமையகம், ஜோகூர் நீதிமன்ற வளாகம் ஆகியவற்றுக்கு மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டன,” என்றது காவல்துறை.
மூன்று மின்னஞ்சல்களும் ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பப்பட்டதுடன் சொல் மாறாமல் அதே செய்தி இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, நடத்தப்பட்ட சோதனைகளில் சந்தேகப்படும்படி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.
மின்னஞ்சல்கள் யாவும் ‘தக்காஹிரொ காராவாசா’ என்ற பெயரில் அனுப்பப்பட்டன.
இதே பெயரில் இவ்வாண்டு பிலிப்பீன்ஸ் அரசாங்க அமைப்புகளுக்கும் 2023ல் கொரிய அரசாங்க அமைப்புகளுக்கும் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல்வழி அனுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.