டெல் அவிவ்: திட்டமிட்டதற்கு முன்னரே தேர்தலை நடத்த எண்ணம் இல்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாகு எடுத்துரைத்துள்ளார்.
டெல் அவிவ் நகரில் ஆயிரக்கணக்கானோர் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட வேளையில் அவர் அவ்வாறு சொன்னார்.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு, எதிர்பாரா வகையில் இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடியாக காஸாவில் மோசமான போர் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து திருரு நெட்டன்யாகுவுக்கு ஆதரவு சரிந்ததாகக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வந்துள்ளன.
சென்ற ஆண்டின் பெரும்பகுதியில் இஸ்ரேலில் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. காஸா போரின்போது அந்த அர்ப்பாட்டங்கள் அடங்கிப் போயின.
எனினும், விரைவில் தேர்தலை நடத்துமாறு சனிக்கிழமையன்று (17 பிப்ரவரி) ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளில் திரண்டனர். 2026ஆம் ஆண்டுக்கு முன்பு தேர்தலை நடத்த இதுவரை திட்டமில்லை.
சென்ற ஆண்டு நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சனிக்கிழமையன்று திரண்டோரின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
“உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது என்பதை நான் அரசாங்கத்திடம் சொல்ல விரும்புகிறேன். முடிந்ததையெல்லாம் சீரழித்துவிட்டீர்கள். நீங்கள் இழைத்த எல்லா தவறுகளையும் மக்கள் சரிசெய்வதற்கான நேரம் இது,” என்று தலையில் இஸ்ரேலிய தேசியக் கொடியைப் போர்த்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் சொன்னார்.
காஸா போர் முடிந்தவுடன் தேர்தல் நடத்துமாறு தனது ஆளும் லிக்குட் கட்சியினருக்கிடையே பேச்சு இடம்பெறுவது பற்றி செய்தியாளர் கூட்டம் ஒன்றில் திரு நெட்டன்யாகுவிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “இப்போது தேர்தலை நடத்துவதும் அதைச் சமாளிப்பதும் தற்போது எங்களுக்குத் தேவையில்லாத பிரச்சினைகள். அவை பிரிவினையை ஏற்படுத்தும்,” என்றார்.
“தற்போது எங்களுக்கு ஒற்றுமைதான் தேவைப்படுகிறது,” என்றும் திரு நெட்டன்யாகு குறிப்பிட்டார்.