சோல்: தென்கொரியா தனது வரலாற்றில் இதுவரை கண்டிராத மழை மிகுந்த குளிர்காலத்தைச் சந்தித்து வருவதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.
அண்மை மாதங்களாக தென்கொரியா முழுவதும் வரலாறு காணாத மழை கொட்டி வருவதாகவும் அது கூறியது.
2023 டிசம்பர் 1 முதல் இவ்வாண்டின் பிப்ரவரி இறுதி வரை 236.7 மில்லிமீட்டர் மழை தென்கொரியாவை நனைத்தது.
1973ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நாட்டில் பெய்த ஆக அதிகமான மழை அது என்று கொரிய வானிலை நிர்வாக (கேஎம்ஏ) அலுவலகம் தெரிவித்து உள்ளது.
தென்கொரியா அந்த ஆண்டில் இருந்துதான் மழை அளவைக் கணக்கிடத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டின் முப்பதாண்டு சராசரி மழை அளவான 89 மில்லிமீட்டர் என்பதைக் காட்டிலும் 2.7 மடங்கு அதிகமாக தற்போது மழை பெய்துள்ளது.
மேலும், 1988ஆம் ஆண்டின் வரலாற்றுப் பதிவை இது மிஞ்சிவிட்டது. அந்த ஆண்டில் 195.9 மில்லிமீட்டர் மழை பெய்ததே இதுவரை சாதனை அளவாக இருந்து வந்தது.
தற்போது அதனைக் காட்டிலும் 40.8 மில்லிமீட்டர் கூடுதலாக மழை பெய்துள்ளது.
மேலும், 2023 டிசம்பர் 1 முதல் இவ்வாண்டின் பிப்ரவரி இறுதி வரை 31.1 நாள்கள் அங்கு மழை பெய்தது. 30 ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் தென்கொரியாவில் சராசரியாக 19.4 நாள்கள் மழை பெய்ததாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.
குறிப்பாக, குறைந்த காற்றழுத்தம் காரணமாக 2023 டிசம்பர் 10 முதல் டிசம்பர் 15 வரை ஆக அதிகமாக மழை பெய்ததாகவும் அது கூறியது.