சோல்: தென்கொரிய கண் மருத்துவர் ஒருவர் மருத்துவராக பணிசெய்ய உரிமம் பெற்ற நான்கே ஆண்டுகளில் தமது தொழிலை விடப்போவதாக அறிவித்துள்ளார்.
அவரை மருத்துவராக பணியில் அமர்த்தியுள்ள மருத்துவமனை அவரது பதவி விலகலை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், 29 வயது பயிற்சி கண் மருத்துவரான அவர், தென்கொரியாவில் 18லிருந்து 35 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும் என்பதற்கு இணங்க ராணுவத்தில் சேரும் சிந்தனையில் உள்ளார். இப்போதைக்கு மருத்துவ தொழிலை விடும் எண்ணத்தில் அந்தப் பயிற்சி கண் மருத்துவர் இருக்கிறார்.
பணியிடச் சூழல் மிகவும் மோசமாக உள்ளதால் மருத்துவராகப் பணிபுரிவது சிரமம் நிறைந்த ஒன்று என பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பயிற்சி கண் மருத்துவர் சன்டே டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியுள்ளார்.
“மருத்துவர்கள் கைநிறைய சம்பாதிப்பதாக ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் எங்களைப் போன்ற பயிற்சி மருத்துவர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. அத்துடன், நாங்கள் நிறைய சம்பாதிப்பதும் இல்லை,” என்று அந்தப் பயிற்சி மருத்துவர் கூறுகிறார்.
இவர் போன்ற பயிற்சி மருத்துவர்கள் வாரம் ஒன்றுக்கு அதிகப்படியாக 50 மணிநேரம்தான் பணி செய்ய வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், தாங்கள் 36 மணிநேர தொடர் வேலை என்ற பணி முறைப்படி வாரம் 82 மணிநேரம் வரை பணி புரிய வேண்டியுள்ளது என்றும் இதற்கு தங்களுக்குக் கிடைக்கும் மாத ஊதியம் 4 மில்லியன் வோனைவிட ($4,000) குறைவு என்றும் இவர்கள் கூறுகின்றனர். ஒப்புநோக்க தங்களுடன் பணிபுரியும் சக அமெரிக்க மருத்துவர்களுக்கு சராசரியாக மாதம் அமெரிக்க டாலர் 5,000 (S$ 6,650) கிடைப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
“நாங்கள் நிறைய சம்பாதிப்பது போல எங்கள் மீது குற்றம் சுமத்தி பொதுமக்கள் பார்வையில் எங்களை தீயசக்திபோல் சித்திரிப்பது ஏமாற்றமாக உள்ளது,” என்று அந்தப் பயிற்சி மருத்துவர் விளக்கினார்.