சியாங் மாய்: தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சியாங் மாய் உலகின் ஆக அதிக மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அங்குள்ள மாசுக் குறியீட்டில் அது PM2.5 ஆக உள்ளது. சுவாசம் வழியாக நுரையீரலுக்குள் சென்று ரத்தத்தில் கலந்து புற்றுநோயை ஏற்படுத்தும் நுண் துகள்கள் அந்தக் காற்றில் கலந்துள்ளன. இது மிகவும் சுகாதாரமற்ற நிலை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் குறித்த அளவில் 35 மடங்கு இந்த மாசு நிலை அதிகமாக உள்ளது. “கொவிட்-19 கிருமித்தொற்று காலத்தில் பயன்படுத்திய அதே வகையான முகக் கவசத்தைத்தான் நான் இப்போது அணிந்துள்ளேன்,” என்றார் வாரோரோட் சந்தையில் ஆரஞ்சுப் பழங்கள் விற்கும் 62 வயது கமோல்.
ஊழல் மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் 15 ஆண்டுகள் தாய்லாந்துக்கு வெளியே வாழ்ந்து வந்தார். அண்மையில் தண்டனையிலிருந்து விடுதலை பெற்ற அவர் மார்ச் 15ஆம் தேதியன்று தமது சொந்த நகரான சியாங் மாயில் உள்ள அதே வாரோரோட் சந்தைக்கு வருகை புரிந்தார். அப்போது முகக் கவசம் அணிந்திருந்த அவருக்குப் பெரிய வரவேற்பை அளித்தனர் அந்நகர மக்கள்.
இவ்வாண்டு தொடக்கம் முதல் சியாங் மாயை அதிக அளவிலான மாசு கடுமையாகப் பாதித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் அந்நாட்டின் நிலத்தில் உள்ள பயிரின் எச்சங்களைச் சுத்தப்படுத்த நிலத்தில் தீயிடுவது வழக்கம். அத்துடன் காட்டுத் தீயும் சேர்ந்துகொண்டு மாசின் அளவை மென்மேலும் உயர்த்தும்.
சுகாதார சீர்கேடுகளின் விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், பிரதமர் சிரேத்தா தவிசினின் அமைச்சரவை தூய்மைக் காற்றுச் சட்டத்துக்கு ஜனவரியில் ஒப்புதல் அளித்தது.
மார்ச் 15ஆம் தேதி சியாங் மாய்க்கு வருகை தந்த பிரதமர் தவிசின், மார்ச் 16ஆம் தேதி காட்டுத் தீ பிரச்சினையைக் கையாளும் அமைப்புகளின் அதிகாரிகளைச் சந்திப்பார்.
“இது நீண்டகாலமாக இருந்துவரும் பிரச்சினை. ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. நான் ஆண்டுதோறும் சுவாசப் பிரச்சினைகளுக்காக மருத்துவப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டியுள்ளது,” என்று சோகத்துடன் கூறினார் பழ வியாபாரி கமோல்.
இந்தப் பிரச்சினைக்கு இன்னும் அதிகாரபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்ச் மாதத்தில் தாய்லாந்து அரசாங்க அமைப்பு எச்சரித்தது. 2023ல் மாசு தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளுக்காக 10 மில்லியன் பேர் சிகிச்சை பெற்றனர் என்றும் தெரிவித்தது.
2023ஆம் ஆண்டில், ஆக மோசமான மாசு நிலையால் சியாங் மாய்க்குச் செல்ல வேண்டாம் என்று அனைத்துலக சுற்றுப்பயணிகளுக்கு ஆலோசனை கூறப்பட்டது. அதனால் அங்குள்ள வர்த்தகங்கள் பாதிப்படைந்தன. உள்ளூர் வருகையாளர்களும் சியாங் மாய்க்கான தங்கள் பயணங்களை ரத்து செய்தனர் என்று வடக்கு தாய்லாந்து ஹோட்டல் சங்கம் தெரிவித்தது.
ஆனால், மார்ச் 15ஆம் தேதி சியாங் மாயின் தெருக்களில் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததாக இல்லை. அதிக அளவிலான மாசு அவர்களின் பயணத் திட்டங்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை.