ரியாத்: இஸ்ரேல் முன்வைத்துள்ள போர் நிறுத்த உத்தேசத் திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏப்ரல் 29ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனப் போராளி அமைப்பிடம் உள்ள பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இஸ்ரேல் வார இறுதியில் போர் நிறுத்த உத்தேசத் திட்டத்தை வெளியிட்டது. இதற்குப் பதிலளிக்க ஏப்ரல் 29ஆம் தேதி கெய்ரோவில் கத்தார் மற்றும் எகிப்திய சமரசப் பேச்சாளர்களை ஹமாஸ் பேச்சாளர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் நடைபெற்ற உலகப் பொருளியல் கருத்தரங்கின்போது பேசிய ஆண்டனி பிளிங்கன், “இஸ்ரேல் பெருந்தன்மையான திட்டத்தை முன்வைத்துள்ளது,” என்றார்.
“காஸா மக்களுக்கும் சண்டை நிறுத்தத்துக்கும் இடையில் இருப்பது ‘ஹமாஸ்’ மட்டுமே, அவர்கள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும்,” என்று கூறிய அவர், அவர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிப்பதற்கு ஈடாக காஸாவில் இன்னமும் சிக்கியிருப்பதாக நம்பப்படும் 130 பிணைக் கைதிகளில் நாற்பதுக்கும் குறைவானவர்களை விடுவிக்க இஸ்ரேலின் உத்தேசத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
ஹமாஸ் முக்கிய நிபந்தனையாகப் போர் நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்கு இஸ்ரேல் சமரசமான பதிலை அளித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 7ஆம் தேதி தென் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் மொத்தம் 253 பிணைக் கைதிகளைப் பிடித்துச் சென்றதாகவும் இந்தத் தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குலில் கிட்டத்தட்ட 34,500 பேர் கொல்லப்பட்டுவிட்டதாக பாலஸ்தீனத் தரப்பு கூறியது.
பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரனும் தற்போது ரியாத்தில் உள்ளார்.
இஸ்ரேலின் உத்தேசத் திட்டம் பெருந்தன்மையானது என்று அவர் குறிப்பிட்டார்.
அதில் 40 நாள் சண்டை நிறுத்தமும் அடங்கும். ஆயிரக்கணக்கான பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கவும் அதே நேரத்தில் இஸ்ரேலியப் பிணைக் கைதிகளை விடுவிக்கவும் அது வகை செய்கிறது என்று உலகப் பொருளியல் கருத்தரங்கில் அவர் தெரிவித்தார்.
“இந்த உடன்பாட்டை ஹமாஸ் ஏற்கும் என நம்புகிறேன்,” என்று திரு கேமரன் கூறினார்.