வாஷிங்டன்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களின் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தாலும் ராட்சத பாண்டாக்களைப் பொறுத்தவரை அவ்விரு நாடுகளுக்கும் இடையே அரசதந்திர உறவு சிறப்பாக உள்ளது.
யுன் சுவான், சின் பாவ் என்ற பெயர்களைக் கொண்ட இரு ராட்சத பாண்டாக்கள் சீனாவின் பாதுகாப்பு, ஆய்வு நிலையத்திலிருந்து அமெரிக்காவின் சான்டியேகோ நகர விலங்குத் தோட்டத்துக்கு அனுப்பப்படும் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சு இந்த வாரம் தெரிவித்துள்ளது. பாண்டாக்களைப் பாதுகாத்து ஆய்வு நடத்துவதன் தொடர்பில் சீனாவுக்கும் சான்டியேகோ விலங்குத் தோட்டத்துக்கும் இடையே நீண்டகாலமாகப் பங்காளித்துவம் இருந்துவருகிறது.
இரு தரப்புக்கும் இடையே இடம்பெறவுள்ள இந்த பாண்டா பரிமாற்றம், உயிரினங்கள் வாழும் இயற்கைப் பகுதிகளைப் பாதுகாப்பதிலும் மோசமான நோய்கள் வருவதைத் தடுப்பதுடன் அவற்றுக்கு சிகிச்சை வழங்குவதிலும் கவனம் செலுத்தும் என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
“இந்த அம்சத்தில் சீன-அமெரிக்க ஒத்துழைப்பு வலுவடைவதன் மூலம் ஒத்துழைப்புக்கும் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்கும் வனப்பகுதி உயிரினங்கள், பல்லுயிரியல் பாதுகாப்பு ஆகியவற்றின் தொடர்பில் ஆய்வு மேற்கொள்வதற்குமான ஆற்றல் மேம்படும். அவ்வாறு அழிந்துபோகக்கூடிய வனப்பகுதி உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும் உதவும், சீனர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையிலான நட்புக்கும் பங்களிக்கும்,” என்று சீன வெளியுறுவு அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் சொன்னார்.
பாண்டாக்கள் எப்போது சான்டியேகோ விலங்குத் தோட்டத்துக்கு அனுப்பப்படும் என்பது தெரியவில்லை. எனினும், இந்தப் பரிமாற்ற ஒப்பந்தம், அண்மைக் காலமாக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்துவரும் பதற்றம் இருநாடுகளுக்கிடையிலான பாண்டா சம்பந்தப்பட்ட அரசதந்திர உறவைப் பாதிக்குமா என்ற அச்சத்தைத் தணிக்கும் என்று நம்பப்படுகிறது.
நட்புறவைச் சித்திரிக்கும் வகையில் சீனா, 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க விலங்குத் தோட்டங்களுக்கு பாண்டாக்களை அனுப்பிவருகிறது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக அவ்வாறு பெற்ற பல பாண்டாக்களை அமெரிக்கா மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து இந்த வழக்கம் இனி இடம்பெறாமல் போகுமோ என்ற அச்சம் நிலவியது.