பெய்ஜிங்: இரு நாடுகளுக்கும் இடையே சிரமமான கலந்துரையாடல்களை நடத்துவதற்கான ஆற்றல், கடந்த ஆண்டில் அவற்றை மேலும் நிலையான இடத்தில் வைத்திருப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஜெனட் யெலன், சீனப் பிரதமர் லி சியாங்கிடம் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் அவர்கள் இருவரும் கூட்டம் ஒன்றைத் தொடங்கவிருந்த நிலையில், இரண்டு நாடுகளும் ஒன்று மற்றொன்றை மதிக்கவேண்டும்; எதிரிகள் அல்லாமல் பங்காளிகளாக இருக்கவேண்டும் என்று திரு லி கூறினார்.
திருவாட்டி யெலனின் பயணத்தின்போது ஆக்கபூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டதை திரு லி சுட்டினார்.
அந்தச் சிக்கலான உறவைச் சமாளிப்பது, வாஷிங்டன், பெய்ஜிங்கின் கடமை என்று திருவாட்டி யெலன் கூறினார்.
“நாம் செய்வதற்கு இன்னும் அதிகம் உள்ளபோதும், கடந்த ஆண்டில் நமது இருதரப்பு உறவு மேலும் நிலையானது என்று நான் நம்புகிறேன்,” என அவர் சொன்னார்.
“நமது வித்தியாசங்களையோ கடுமையான கலந்துரையாடல்களையோ புறக்கணிக்காமல் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகவும் நேரடியாகவும் பேசுவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம் என்பதை புரிந்துகொள்வதால் இது சாத்தியமானது,” என்றார் திருவாட்டி யெலன்.