அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ரசிகர்கள் ‘புஷ்பா 2’ திரைப்பட வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஆனால், அதற்காக அவர்கள் கூடுதல் காலம் காத்திருக்க வேண்டும் என்பதுபோல தெரிகிறது.
ஊடகங்களில் வெளியாகிவரும் தகவல்களின்படி, ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு இப்போதைக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை படமாக்கப்பட்டுள்ள ‘புஷ்பா 2’ காட்சிகள் குறித்து அத்திரைப்பட இயக்குநர் சுகுமார் திருப்தி அடையவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இதுவரை படமாக்கப்பட்டுள்ள காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பத்திலிருந்து தொடங்குவது குறித்து சுகுமார் பரிசீலித்து வருவதாக ‘பாலிவுட் லைஃப்’ இணையத்தளம் குறிப்பிட்டது.
ஏப்ரல் 8ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி ‘புஷ்பா 2’ படத்தின் டீசரை வெளியிடுவது குறித்தும் சுகுமார் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு தொடங்கக்கூடும் என்று Siasat.com வெளியிட்ட மற்றோர் அறிக்கை குறிப்பிட்டது.
அதன் பொருட்டு, இத்திரைப்படம் இவ்வாண்டு வெளியாவது சந்தேகம் எனத் தெரிகிறது.
எனினும், ‘புஷ்பா 2’ படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்படுவது பற்றி அதிகாரபூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.