வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு தனது தந்தையை முன்மாதிரியாகக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார் சிருஷ்டி டாங்கே.
பெரும் போராட்டங்களைக் கடந்து தந்தை வாழ்க்கையை வென்று காட்டியதாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“வெறும் வார்த்தை ஜாலத்துக்காக இவ்வாறு சொல்லவில்லை. வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைப் பார்த்தவர் அவர்.
“நான் இப்போது என் சொந்தக் காலில் நிற்க காரணம் என் தந்தைதான். ‘அடிமட்டத்தில் இருந்து என்னால் உயர்ந்த இடத்தை அடைய முடிந்தது என்றால் உன்னாலும் முடியும்’ என்று அடிக்கடி எனக்கு ஊக்கம் அளிப்பார்.
“எனது பாட்டி வீட்டு வேலை செய்துதான் என் அப்பாவை வளர்த்தாராம். இரவுப் பள்ளியில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறி காட்டினார்.
“இந்திய விமானப் படையில் உயர் பதவியில் இருந்த அவர், ஓய்வுக்குப் பிறகு மகாராஷ்டிர அரசுத் துறை திட்டங்களில் பணியாற்றினார்.
“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் அவர் நம்பிக்கையை இழந்ததில்லை. எனவே, என் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் அவரைப் பின்பற்ற வேண்டும் என விரும்புகிறேன்,” என்கிறார் சிருஷ்டி டாங்கே.
திரைப்படங்களில் சுட்டிப் பெண்ணாக வலம்வரும் இவர், நிஜத்தில் அதிகம் பேச மாட்டாராம்.
“எந்த நிலையிலும் சிரிக்க மறக்க மாட்டேன். எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் கிடையாது. என் காதுக்கு பல விஷயங்கள் வந்தாலும் எதையும் வெளியே சொல்லமாட்டேன்.
“என் சோகம் என்னோடு போகட்டும் என்று எதுவாக இருந்தாலும் என் மனதுக்குள் பூட்டி வைத்துவிடுவேன்,” என்று சொல்லும் சிருஷ்டி டாங்கே, மகாராஷ்டிராவில் பிறந்தவர். எனினும், சரளமாக தமிழ் பேசுகிறார்.
‘சந்திரமுகி 2’ படத்தில் நடித்தபோது அப்பட நாயகி கங்கனாவும்கூட, சிருஷ்டி டாங்கே குடும்பத்தார் வடஇந்தியாவில் இருந்து வந்து தமிழகத்தில் குடியேறிவிட்டதாக நினைத்தாராம்.
“நான் பேசிய தமிழ் அவரை இவ்வாறு யோசிக்க வைத்திருக்கிறது.
“வசனங்களுக்கான அர்த்தம் தெரிந்தால்தான் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியும். இல்லையென்றால் அந்நியமாகத் தெரியும். அதனால்தான் தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த கையோடு, தமிழ் கற்கத் தொடங்கினேன்,” என்று சொல்லும் சிருஷ்டி, திரையுலகில் தாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை கடந்து வந்த பாதையைக் காட்டிலும் இனி கடக்க வேண்டிய தூரம் சவாலானதாக இருக்கும் எனக் கருதுகிறாராம்.
“உண்மையைச் சொல்வதாக இருந்தால், எனது திரைப்பயணத்தில் சரிபாதி தூரத்தைத்தான் கடந்துள்ளேன். அதாவது, எனக்கான பாதையில் நடுவில் நின்று கொண்டிருக்கிறேன்.
“இவ்வாறு நடுவில் நிற்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஏனெனில் இந்த இடத்தில் நிற்பவர்கள் பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
“கீழே இருப்பவர்கள் திரையுலகில் உயரங்களைத் தொட வேண்டும் என நினைப்பார்கள். ஏற்கெனவே உயர்ந்த இடத்தைப் பிடித்தவர்கள் அனைத்தையும் பார்த்துவிட்டுத்தான் அந்த இடத்தைப் பிடித்திருப்பார்கள்.
“ஆனால், இது இரண்டும் இடையே உள்ளவர்கள் வெற்றியை நோக்கிச் செல்லும்போது பல்வேறு கடினமான சூழல்களைக் கடக்க வேண்டும். இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.