காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்ஜிஆரைப் பின்பற்றி தானும் சமூக சேவை செய்ய விரும்புவதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பல்வேறு தரப்பினருக்கும் அவர்களது தேவையைக் கண்டறிந்து இவர் உதவி வருகிறார். இரண்டு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தற்போது ‘சேவையே கடவுள்’ என்ற பெயரில் புதிய அறக்கட்டளையைத் தொடங்கி உள்ளார்.
இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ‘கலக்கப்போவது யார்’ நிகழ்ச்சி பங்கேற்பாளரான பாலா, அறந்தாங்கி நிஷா, சமையல் கலைஞர் வினோத் ஆகியோரும் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்த அறக்கட்டளை மூலம் ஏழை விவசாயிகளுக்குப் பத்து டிராக்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக பத்து ஊர்களைத் தேர்ந்தெடுத்து அந்த ஊரில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில் இலவச டிராக்டர்களை வழங்கி உள்ளதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தன்னுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்திருப்பது கடவுளின் ஆசிர்வாதம் என்றார்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னுள் திடீரென ஒரு மாற்றம் நிகழ்வதை உணர்ந்தேன். ஒரு கோவிலுக்குச் சென்று வந்த நாளில் கனவு வந்தது. அப்போது கண்களில் இருந்து தானாக கண்ணீர் வந்தது.
“அதுதான் எனக்கு ஏற்பட்ட மாற்றத்தின் துவக்கம். என்னுடன் இணைந்துள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். என்னை இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தது என் தாயார்தான். சிறு வயதிலேயே தன் மகனை எம்ஜிஆர் போன்று வளர்க்கப்போவதாக அம்மா அடிக்கடி சொல்வார். எம்ஜிஆர் அளவுக்கு இல்லை என்றாலும் சிறிய அளவிலாவது அவரைப்போல் செயல்படுவேன்,” என்று லாரன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.