மே 16ஆம் தேதி கொவிட்-19 கட்டுப்பாடுகள் கெடுபிடியாக்கப்பட்ட பின்னர் நாளை (ஜூலை 12) முதல் உணவகங்களில் ஐந்து பேர் குழுவாக சென்று உணவருந்த முடியும்.
துவண்டு போய் இருந்த பல உணவகங்களுக்கு புதிய தளர்வுகள் புத்துயிர் தரும் என்று பல கடைக்காரர்கள் தமிழ் முரசிடம் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
“வெளிநாட்டு ஊழியர்கள் இல்லாதக் குறையால் கிருமித்தொற்று தொடங்கிய காலம் முதல் பல கடைகளில் வர்த்தகம் மிகக் குறைவாகவே இருந்தது. கடுமையான கட்டுப்பாடுகளால் உள்ளூர் மக்கள் வருகையும் வற்றிப்போனது மற்றோர் அடி,” என்றார் காந்தி உணவகத்தின் நிர்வாகி திரு ராஜ்மோகன் பக்கிரிசாமி, 42.
உணவு விநியோகத்தில் சிறிது அளவு வருமானம் கிடைத்தபோதும் மக்கள் நேரடியாக உணவகத்திற்கு வந்து சாப்பிடுவதற்கு அது ஈடாகாது என்றார் திரு ராஜ்மோகன்.
“விசுவாசமான வாடிக்கையாளர்கள் நம் கடையைத் தேடி வந்து உணவைக் கட்டி எடுத்து சென்றனர். நம் கடையின் நீண்ட வரலாற்றால் அந்த அதிர்ஷ்டம் இருந்தது. இருந்தாலும் நேரடியாக வந்து சாப்பிடும் வாடிக்கையாளர்கள் மூலம் தான் நிறைவான வருமானம் ஈட்டு கிறோம்,” என்றார் ராஜ்மோகன்.
புதுப்பிப்புப் பணிகள் முடிந்து கடந்த வாரம் முத்துஸ் கறி உணவகத்தில் அமர்ந்து உணவருந்துவது மீண்டும் தொடங்கியது.
“வழக்கநிலை திரும்புவதற்கு இது ஓர் அறிகுறி. மறுபடியும் குடும்பத்தோடும் நண்பர்களோடும் மக்கள் குழுக்களில் வந்து சாப்பிடுவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது,” என்றார் முத்துஸ் கறி நிர்வாகிகளில் ஒருவரான திருமதி விஷாலி விஸ்வனாத், 43.
கட்டுப்பாட்டுத் தளர்வுகளால் வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக கூடும் என எதிர்பார்த்தாலும் அதற்கு சிறப்பு ஏற்பாடு எதுவும் தேவையில்லை என்று தமிழ் முரசிடம் பேசிய உரிமையாளர்கள் கூறினர்.
“இதைவிட பல மடங்கு பெரிய கூட்டங்களைச் சமாளித்துள்ளோம். உணவகத்தில் மேசை, நாற்காலி அமைப்புகளை ஐந்து பேர் குழுக் களாக உட்காரும் வகையில் பாதுகாப்பாக மாற்றினால் போதும். மற்றபடி வழக்கம்போல இயங்குவோம்.,” என்றார் விஷாலி.
கிட்டத்தட்ட இரண்டு மாதம் நீடித்த கடும் கட்டுப்பாடுகளை வாய்ப்பாக பயன்படுத்தி, முத்துஸ் கறியைப் போல மேலும் சில உணவகங்கள் புதுப்பிப்பை மேற்கொண்டன. பணிகள் செய்தன.
கடந்த 17 ஆண்டு காலமாக ரேஸ் கோர்ஸ் சாலையில் இயங்கி வரும் காயத்திரி உணவகத்தின் சமையலறையில் முதல்முறையாக விரிவான புதுப்பிப்புப் பணிகள் நடந்தன என்றார் காயத்ரி உணவகத்தின் உரிமையாளர் திரு சண்முகம் கணேசன், 58.
“வழக்கமான நேரத்தில் பெரிதளவில் புதுப்பிப்பு பணிகள் செய்வது சாத்தியமே ஆகாது. சோதனையை வாய்ப்பாக மாற்ற நினைத்தோம். துவாஸ் பகுதியில் இருக்கும் நம் மைய சமையலறை மூலம் உணவு விநியோகித்துக்கொண்டு, உணவகத்தை மூடி புதுப்பிப்பு பணிகள் செய்தோம். இதனால் நவீன சாதனங்களுடன், அதிக சுகாதாரத்துடன் உணவகத்திலேயே உணவைத் தயாரிக்க முடியும்,” என்றார் திரு சண்முகம்.
சிங்கப்பூர் மக்கள் தொகையில் 50% இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டால் எட்டுப் பேராக அமர வாய்ப்பு வழங்கப்படலாம் என்று அரசாங்கம் கூறியுள்ளது.
கொவிட்-19 நிலவரம் சீராக இருந்தால் கூடுதல் தளர்வுகளை இம்மாத இறுதியில் எதிர்பார்க்கலாம்.