வாங்கிய கடனைத் தீர்க்க இயலாத சூழல். சிறைச்சாலையில் சில காலம். வணிகத்தில் ஏமாற்றிய தொழிலாளர்கள். இந்தச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டபோது விக்னேஷ் மோகனுக்கு வயது 26தான்.
ஆனாலும், சமையற்கலைமீது விக்னேஷுக்கு அளவு கடந்த நாட்டம் இருந்தது. சவால்கள் பல இருந்தபோது தனது வாழ்க்கைப்பாதையை மாற்றி, தன்னுடைய சமையல் ஆர்வத்துக்குத் தீனிபோட அவர் விரும்பினார்.
“உணவு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். சமையல் கலை மற்றும் அதன் நுணுக்கங்கள் பற்றி பள்ளியில் முறையாகக் கற்க ஆசைப்பட்டேன்,” என்றார் இப்போது 33 வயதாகும் விக்னேஷ்.
அதற்கேற்ப, அட்-சன்ரைஸ் குளோபல்செஃப் அகாடமியில் இரண்டு ஆண்டுகள் பயின்றார் விக்னேஷ். அப்போது கிடைத்த வாய்ப்பாலும் தனது பள்ளியின் ஆதரவாலும் அவர் அமெரிக்காவுக்குச் சென்றார்.
ஏழு மாதங்களாக நாஷ்வில் நகரத்தில் இருந்த மாரியட் விடுதியில் ஒரு சமையற்காரராக பணிபுரிந்த விக்னேஷின் மனத்தில் சொந்த உணவகம் என்ற கனவுக் கோட்டையும் உருவாகத் தொடங்கியது.
“எனக்குப் பெரும்பாலும் இத்தாலிய, தாய், ஜப்பானிய உணவுகளின்மீது மிகுந்த விருப்பம். மேலும், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் உணவு கலாசாரம் சற்று வேறுபட்டு இருக்கும். அதைக் கற்றுக்கொண்ட அனுபவம் மிக சுவாரசியமான ஒன்றாக இருந்தது,” என்றார் இவர்.
புகையைப் பயன்படுத்தி இறைச்சியின் சுவையைக் கூட்டும் உத்தி பல அமெரிக்க உணவு வகைகளில் கையாளப்படும் ஒன்று. பார்பக்யூ சமையல் முறைக்கு நிகரான இந்தச் சமையல் உத்தி பெரும்பாலும் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக்கு பயன்படுத்தப்படும்.
“வெறும் புகையைப் பயன்படுத்தும் சமையல் உத்தியில் பொதுவாக ஹிக்கரி மரக்கட்டைகளை சமையல் வல்லுநர்கள் பயன்படுத்துவார்கள். இது உணவுக்கு ஒரு வலுவான சுவையை அளிக்கிறது. ஆனால், ஹிக்கரி மரக்கட்டைகள் சற்று விலைகூடியவை,” என்று விக்னேஷ் சொன்னார்
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய விக்னேஷ், பிகோடின் உணவகத்தில் சிறிது காலம் தலைமைச் சமையல் வல்லுநராகப் பணிபுரிந்தார். இருப்பினும், அமெரிக்க அனுபவம் அவருக்கு புதிய உத்வேகத்தை அளிக்க, தனது சொந்த உணவகக் கனவை மெய்யாக்க ஆயத்தமானார்.
“புகைத்த இறைச்சி முறையை நான் ஏன் சிங்கப்பூரில் எல்லா உணவுவகைகளிலும் மேற்கொள்ளக் கூடாது?” என்று எண்ணினார் விக்னேஷ்.
கடந்த ஜனவரி 26ஆம் தேதி, சாங்கியில் அமைந்துள்ள காஸ்ஃபார்ட் வெளிப்புற பூங்காவில் ‘தி ஸ்லைஸ் ஹவுஸ்’ எனும் உணவகத்தை தொடங்கினார் விக்னேஷ். சமைக்கப்படும் எல்லா உணவிலும் புகைத்த இறைச்சி இருக்கும். இந்த உணவகத்தில் இதுவே தனித்துவ அம்சமாகும்.
“காஸ்ஃபார்ட் வெளிப்புறப் பூங்காவில் பல உணவகங்கள் அமைந்துள்ளன. இது ஒரு மேற்கத்திய பாணி - பெரும்பாலும் அமெரிக்க நகரங்களில் இதுபோன்ற வெளிப்புற உணவுப் பூங்காவை அதிகம் காணலாம். சிங்கப்பூரில் இதுவே தற்போது ஆகப் பெரிய வெளிப்புற உணவுப் பூங்கா ஆகும். அதில் என் உணவகம் ஒரு இடம் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.”
‘தி ஸ்லைஸ் ஹவுஸ்’ உணவகம் வாரத்தில் எல்லா நாள்களும் இரவு ஒரு மணி வரை திறந்திருக்கும்.
மேற்கத்திய உணவு வகைகளைச் சிங்கப்பூருக்கு கொண்டு வருவது மட்டுமன்றி, தரம் வாய்ந்த உணவை மக்களும் சுவைக்க வேண்டும் என்பதே தன் குறிக்கோள் என்கிறார் விக்னேஷ்.
தனது உணவகம் ஒரு நாள் கடல் தாண்டி மற்ற நாடுகளில் செயல்படும் என்று திடமாக இவர் நம்புகிறார்.
“வாழ்க்கையில் தவறுகள் நடப்பது மிக இயல்பான ஒன்று. அதிலிருந்து கற்ற பாடங்களை நாம் எப்படி நமக்குச் சாதகமாக மாற்றி, நமது கண்ணோட்டத்தைத் திசைதிருப்பலாம் என்பது கடினமாக இருந்தாலும் நமது கனவுகளைத் தொடர இது மிக முக்கிய மைல்கல்லாகும்,” என்கிறார் விக்னேஷ்.

