ஐந்து நாட்கள் மருத்துவ விடுப்பு: விதிமுறையை மீறினால் சிறை, அபராதம்
சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு ஐந்து நாட்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்படுபவர்கள், தங்கள் வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது. மருத்துவ விடுப்பின் முதல் நாளிலிருந்து அவர்கள் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறையை மீறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, $10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
மருத்துவரைப் பார்க்க மட்டும் அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறலாம்.
கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சளி போன்ற சுவாசப் பிரச்சினைக்கான அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு ஐந்து நாட்கள் மருத்துவ விடுப்பு கொடுக்கும்படி கடந்த மாதம் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த ஐந்து நாட்கள் மருத்துவ விடுப்பு விதிமுறையை ஒழுங்காக கடைப்பிடிக்கும்படி பொதுமக்களுக்கும் முதலாளிகளுக்கும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.