பாலர்பள்ளியில் கிருமித்தொற்று: செயல்முறைகளை மறுஆய்வு செய்யும் பிசிஎஃப்
பிடோக் நார்த்தில் உள்ள ஃபெங்ஷான் பிசிஎஃப் ஸ்பார்க்கல்டோட்ஸ் பாலர்பள்ளியில் பலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுனம் (பிசிஎஃப்) அதன் செயல்முறைகளை மறுஆய்வு செய்ய இருக்கிறது.
அந்தப் பாலர்பள்ளியைச் சேர்ந்த மேலும் ஓர் ஆசிரியருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதாக இன்று (மார்ச் 26) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பாலர்பள்ளியில் 15 ஊழியர்களுக்கும் நான்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
உடல்நலமில்லாமல் இருப்பதாக தெரிவித்த ஐந்து குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்படவில்லை என்று மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஃபெங்ஷான் நிலையத்தின் எஞ்சியுள்ள 10 ஊழியர்களும் 110 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மற்ற பிசிஎஃப் நிலையங்களைச் சேர்ந்த 30 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஃபெங்ஷான் நிலையத்தின் தலைமையாசிரியருடன் இவர்கள் பயிற்சி ஒன்றில் பங்கெடுத்தனர்.
நாடெங்கும் 360 நிலையங்களை நடத்தும் பிசிஎஃப் அதன் அன்றாட செயல்முறைகளையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் அதன் ஊழியர்களிடம் வலியுறுத்த இருக்கிறது.
“பாலர்பள்ளிகளில் அன்றாட செயல்முறைகளுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வலுவாக்கப்படும் என்ற நம்பிக்கையைப் பாலர் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு இது அளிக்கும்,” என்றார் அமைச்சர் லீ.
இன்று முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து பிசிஎஃப் பாலர்பள்ளிகளும் மூடப்படும் என்று ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு வாரியம் நேற்று தெரிவித்தது.
“உடல்நலம் இல்லாத ஆசிரியர்கள் மேலும் சில மணி நேரத்துக்கு பணியைத் தொடராமல் உடனடியாக நிலையத்தைவிட்டு வெளியேறியிருக்க வேண்டும் என்று சிலர் கூறலாம்.
“ஆனால் நடைமுறையில் இது சிரமம். நிலையத்தின் ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோர் இனி தேவையான நடவடிக்கைகளை எடுப்பர்.
“மற்றவர்களைக் குறைகூறுவதற்கான நேரம் இதுவல்ல. பெற்றோருக்கு நம்பிக்கை அளிக்க பாலர் கல்வித் துறைக்கு ஊக்குவிப்பும் ஆதரவும் கொடுப்பதே முக்கியம்,” என்றார் அமைச்சர் லீ.